30 வருடங்களுக்கு பிறகு நடிகர் பாக்யராஜியும், நடிகை ஐஸ்வர்யாவும் புதிய படம் ஒன்றில் இணைந்து நடிக்கிறார்கள்.
ஒலிம்பியா மூவிஸ் சார்பில் தயாரிப்பாளர் எஸ்.அம்பேத் குமார் தயாரிக்கும் புதிய படத்தினை கணேஷ் கே.பாபு இயக்குகிறார். ரொமான்ஸ், காமெடி, உணர்வுபூர்வமான தருணங்கள் நிறைந்த இந்த படத்தின் படப்பிடிப்பு மார்ச் முதல் வாரத்தில் தொடங்கி பரபரப்பாக நடந்து வருகிறது.
முன்னணி நடிகர்கள் மற்றும் நட்சத்திர நடிகர்கள் இணைந்த நடிப்பதால், படத்தின் மீது ஏற்கனவே எதிர்பார்ப்பு உருவாக்கியுள்ள நிலையில், சமீபத்திய அறிவிப்பு படத்திற்கு மேலும் பலம் கூட்டியுள்ளது. நடிகர் பாக்யராஜ் மற்றும் ஐஸ்வர்யா ஆகியோர் இப்படத்தில் கவின் பெற்றோராக நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளனர். இவர்கள் இருவரும் 1992-ல் வெளியான ‘ராசுக்குட்டி’ என்ற படத்தில் நடித்திருந்தனர். 30 வருடங்களுக்கு பிறகு மீண்டும் இவர்கள் இந்த படத்தில் ஜோடியாக நடிக்கிறார்கள்.
‘முதல் நீ முடிவும் நீ’ படப்புகழ் ஹரிஷ், ‘வாழ்’ படப்புகழ் பிரதீப் ஆண்டனி மற்றும் பல முக்கிய நட்சத்திர நடிகர்கள் இப்படத்தில் நடிக்கின்றனர். எழில் அரசு ஒளிப்பதிவு செய்கிறார். ஜென் மார்ட்டின் இசையமைக்கிறார்.