`சதி பண்ணி என் படத்தை நிறுத்திட்டாங்க’: பிரபல நடிகர் உருக்கம்!

`சதி பண்ணி என் படத்தை நிறுத்திட்டாங்க’: பிரபல நடிகர் உருக்கம்!

``தான் நடித்த படத்தை சதி செய்து நிறுத்திவிட்டார்கள்'' என்று பிரபல நடிகர் உருக்கமாகத் தெரிவித்துள்ளார்.

மலையாளத்தில் வெற்றிபெற்ற 'ஜோசப்' படம் தமிழில் 'விசித்திரன்' என்ற பெயரில் ரீமேக் செய்யப்பட்டது. இதில் ஆர்.கே.சுரேஷ் நடித்திருந்தார். இதே படம் தெலுங்கில் ’சேகர்’ என்ற பெயரில் ரீமேக் செய்யப்பட்டுள்ளது. இந்தப் படத்தை நடிகை ஜீவிதா இயக்க, அவர் கணவர் டாக்டர் ராஜசேகர் நாயகனாக நடித்துள்ளார். அவர்கள் மகள் ஷிவானி ராஜசேகரும் நடித்துள்ளார். கடந்த சில நாட்களுக்கு முன் வெளியாகி, இந்தப் படம் ரசிகர்களிடையே வரவேற்பைப் பெற்றது.

இந்நிலையில் குரு பரந்தாம ரெட்டி என்ற பைனான்ஸியர், இந்தப் படத்துக்காகத் தன்னிடம் வாங்கிய கடனைத் திருப்பித் தரவில்லை என்று கூறி, ஹைதராபாத் சிட்டி சிவில் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார். விசாரித்த நீதிமன்றம் படத்தை வெளியிட தடை விதித்துவிட்டது. இதனால் நன்றாக ஓடிக் கொண்டிருந்த படம் தியேட்டர்களில் இருந்து எடுக்கப்பட்டது. இந்நிலையில், டாக்டர் ராஜசேகர் தனது சமூக வலைதளப் பக்கத்தில் உருக்கமான பதிவொன்றை வெளியிட்டுள்ளார்.

அதில், ``எனக்கும் என் குடும்பத்துக்கு இந்த ’சேகர்’ படம்தான் எல்லாமே. இந்தப் படத்தை ரசிகர்களிடம் கொண்டு சேர்க்க நாங்கள் கடுமையாக உழைத்தோம். படத்துக்கு நல்ல வரவேற்பு கிடைத்துக் கொண்டிருந்த நிலையில், வெறுப்பின் காரணமாக, சிலர் சதி செய்து படத்தைத் திரையிடவிடாமல் தடுத்துள்ளனர். சினிமாதான் எங்கள் வாழ்க்கை. குறிப்பாக இந்தப் படம் எங்களின் நம்பிக்கை. நான் சொல்ல வேண்டிய வார்த்தைகள் முடிந்துவிட்டன. இந்தப் படம் ரசிகர்களின் பார்வைக்கு மீண்டும் வரும் என்றும் உண்மையிலேயே தகுதியான பாராட்டைப் பெறும் என்றும் நம்புகிறேன்’ எனத் தெரிவித்துள்ளார்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in