சூர்யா, அபர்ணா பாலமுரளி, ஊர்வசி, கருணாஸ், பரேஸ் ராவல் உட்பட பலர் நடித்த படம் ’சூரரைப் போற்று’. சுதா கொங்கரா இயக்கிய இந்தப் படம், கடந்த 2020-ம் ஆண்டு நேரடியாக ஓடிடி-யில் வெளியாகி வரவேற்பைப் பெற்றது. இப்போது இந்தப் படம் இந்தியில் ரீமேக் ஆகிறது. சுதா கொங்கரா இயக்குகிறார். அக்ஷய் குமார், ராதிகா மதன் ஜோடியாக நடிக்கின்றனர்.
இந்தப் படத்தை, சூர்யாவின் 2 டி என்டர்டெயின்மென்ட் நிறுவனம், அபுடண்டியா என்டர்டெயின்மென் ட், கேப் குட் பிலிம்ஸ் ஆகிய நிறுவனங்களுடன் இணைந்து தயாரிக்கிறது. இதில் சூர்யா கவுரவ வேடத்தில் நடிக்கிறார். கடந்த ஏப்ரல் மாதம் இதன் ஷூட்டிங் மும்பையில் தொடங்கியது.
இந்நிலையில், படப்பிடிப்பு தளத்தில் அக்ஷய் குமாருடன் இருக்கும் புகைப்படத்தை நடிகர் சூர்யா வெளியிட்டிருந்தார். அதில், ‘இந்தியிலும் படம் சிறப்பாக வந்துகொண்டிருக்கிறது. அக்ஷய் குமாரின் நடிப்பை பார்க்க ஆவலுடன் காத்திருக்கிறேன். சுதா கொங்கரா திறம்பட இந்தப் படத்தை இயக்கி வருகிறார். இதில் கவுரவ தோற்றத்தில் நடிக்கிறேன்’ என சூர்யா தெரிவித்திருந்தார்.
இந்நிலையில், சூரரைப் போற்று படத்தின் பொம்மி வேடத்தில் நடித்த அபர்ணா பாலமுரளி, அக்ஷய் குமாருடன் எடுத்துள்ள புகைப்படத்தை தனது சமூக வலைதளப் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். அதில் வீரை சந்தித்த பொம்மி என்று குறிப்பிட்டுள்ள அவர், உங்களைச் சந்தித்ததில் மகிழ்ச்சி. மிகவும் சந்தோஷத்தில் இருக்கிறேன். உங்கள் வார்த்தைகள் எனக்கு முக்கியமானது. சுதா கொங்கரா மேடத்துக்கும் நன்றி கடன்பட்டிருக்கிறேன். ராதிகா மதனை சந்திக்க இயலவில்லை. உங்கள் மேஜிக்கை திரையில் பார்க்க காத்திருக்க முடியாது’ என்று குறிப்பிட்டுள்ளார்.
இதையடுத்து நடிகை ராதிகா மதன் அவருக்குப் பதிலளித்துள்ளார். அதில், நீங்கள் மீண்டும் படப்பிடிப்புக்கு வரவேண்டும். நான் இதை எப்படி தவறவிட்டேன் என்று தெரியவில்லை’ என்று தெரிவித்துள்ளார்.