நடிகர் பிரஷாந்தின் ‘அந்தகன்’ படத்திற்காக அனிருத் மற்றும் விஜய்சேதுபதி இணைந்து பாடியுள்ளனர்.
பாலிவுட்டில் ஆயுஷ்மன் குரானா நடிப்பில் வெளியாகி வெற்றிப் பெற்றத் திரைப்படம் ‘அந்தாதூன்’. தமிழில் இந்தத் திரைப்படம் ‘அந்தகன்’ என்ற பெயரில் ரீமேக் செய்து வெளியாக இருக்கிறது. இதில் கதாநாயகனாக நடிகர் பிரஷாந்த் நடிக்க சிம்ரன், பிரியா ஆனந்த் ஆகியோர் முக்கியக் கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். இந்தப் படத்தை பிரஷாந்த்தின் தந்தையும் நடிகரும் இயக்குநருமான தியாகராஜன் தயாரித்து இயக்கி வருகிறார்.
படப்பிடிப்பு கிட்டத்தட்ட முடிவடைந்த நிலையில் இறுதிக்கட்ட காட்சிக்காக ‘ரோரா புஜ்ஜி’ பாடலை இசையமைப்பாளர் அனிருத் மற்றும் நடிகர் விஜய்சேதுபதி ஆகிய இருவரும் சந்தோஷ் நாராயணன் இசையில் இணைந்து பாடியுள்ளனர். வேறொரு கதாநாயகனுக்காக அனிருத் மற்றும் விஜய்சேதுபதி இருவரும் இணைந்து பாடுவது என்பது இதுவே முதல்முறை. இந்தப் பாடலுக்கு இயக்குநரும் நடிகருமான பிரபுதேவா நடனம் அமைக்க உள்ளார்.
பிரஷாந்த், அனிருத், சிம்ரன், பிரியா ஆனந்த் மற்றும் ஐம்பது நடனக் கலைஞர்கள் ஆடும் இந்தப் பாடல் காட்சிக்காக மிக பிரம்மாண்டமான அரங்கம் அமைக்கப்பட்டு வருகிறது. இந்தப் பாடல் காட்சி படமான உடன் ‘அந்தகன்’ படத்தின் இசை வெளியீட்டு விழா நடைபெற இருக்கிறது. மேலும், இந்தப் படத்தைத் தயாரிப்பாளர் கலைப்புலி எஸ். தாணு உலகமெங்கும் திரையிடத் திட்டமிட்டு வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.