
பாலிவுட் பாஷா ஷாருக்கானின் நடிப்பில், அட்லீ இயக்கத்தில் உருவாகி வரும் ’ஜவான்’ திரைப்படத்தில் தோன்றும் வாய்ப்பை தெலுங்கு முன்னணி நடிகரான அல்லு அர்ஜூன் தவிர்த்திருக்கிறார்.
பதான் திரைப்படத்தை தொடர்ந்து ஷாருக்கானின் அடுத்த வெளியீடாக, பரபரப்புடன் தயாராகி வருகிறது ‘ஜவான்’ திரைப்படம். கோலிவுட்டின் இளம் வெற்றி இயக்குநர் அட்லீ இந்த திரைப்படத்தை இயக்குகிறார். நயன்தாரா, விஜய் சேதுபதி உள்ளிட்ட பலர் இந்த திரைப்படத்தில் இணைந்து நடித்து வருகின்றனர்.
இந்நிலையில் இந்த திரைப்படத்தின் முக்கியத் தோற்றத்தில் நடிக்க தெலுங்கு முன்னணி நடிகரான ஐகான் ஸ்டார் அல்லு அர்ஜூனை, படக்குழுவினர் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தி உள்ளனர். தொடக்கத்தில் தயக்கத்தோடு சம்மதித்த அல்லு அர்ஜூன், பின்னர் மனம் மாறியவராக மறுப்பு தெரிவித்ததாக சொல்லப்படுகிறது. ஷாருக்கான், விஜய் சேதுபதி ஆகியோரை மீறி தனக்கான இடம் திரையில் வெளிப்பட வாய்ப்பில்லை என்பால் ஜவான் வாய்ப்பை அல்லு அர்ஜூன் மறுத்ததாக சொல்லப்படுகிறது.
இதைவிட முக்கியமாக, சுகுமார் இயக்கத்தில் மிகப்பெரும் வெற்றி பெற்ற ’புஷ்பா’ திரைப்படத்தின் இரண்டாம் பாகத்துக்காக அல்லு அர்ஜூன் மும்முரமாக தயாராகி வருகிறார். முதல் பாகத்தை விஞ்சும் வகையில் இரண்டாம் பாகம் இருக்க வேண்டும் என்பதற்காக, தோற்றம், பாவனை என சகலத்திலும் மாறியும் வந்திருக்கிறார். இடையில் ஜவான் திரைப்படத்தில் நடிப்பது, புஷ்பா- 2க்கான தயாரிப்புக்கு ஊறாகும் என்பதுவும் அல்லு அர்ஜூன் மன மாற்றத்துக்கு ஒரு காரணமாம்.
இது தவிர, புஷ்பா 1 வரிசையில் புஷ்பா-2 திரைப்படத்தையும் இந்தி உள்ளிட்ட பல்வேறு மொழிகளில் வெளியிட முடிவு செய்யப்பட்டிருக்கிறது. தற்போது ஜவானில் சிறிய வேடத்தில் நடிப்பது, புஷ்பா-2க்கான இந்தி எதிர்பார்ப்புகளை பொய்க்கச் செய்யும் என்பதை மற்றொரு காரணமாகச் சுட்டுகிறார்கள்.