நடிகர் விஜயின் 'வாரிசு' படத்தை வரவேற்று அஜித் ரசிகர்கள் பதாகை வைத்திருக்கும் சம்பவம் ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது.
பொங்கலை முன்னிட்டு விஜய் நடித்த 'வாரிசு', அஜித் நடித்த 'துணிவு' ஆகிய திரைப்படங்கள் ஒரேநாளில் ரிலீஸ் ஆகின்றன. இதனால் அஜித், விஜய் இருதரப்பு ரசிகர்களுமே மிகவும் உற்சாகத்தில் உள்ளனர். 'வாரிசு', 'துணிவு' இருபடங்களையுமே ரெட் ஜெயிண்ட்ஸ் நிறுவனம் ரிலீஸ் செய்கிறது.
இணையத்தில் இப்போதே விஜய், அஜித் ரசிகர்கள் யார் படம் ஹிட் அடிக்கும் என்பது தொடர்பாக மோதிக்கொள்ளவும் ஆரம்பித்து விட்டனர். திரையரங்கத்தில் பேனர், பிளக்ஸ் வைக்க இடம்பிடிப்பது தொடங்கி இப்போதே ரசிகர்களின் கொண்டாட்டம் களைகட்டி உள்ளது. அஜித், விஜய் ரசிகர்கள் போட்டி, போட்டுக் கொண்டு பதாகைகளும் வைத்துவருகின்றனர்.
இந்நிலையில் திருநெல்வேலியில் அஜித் ரசிகர்கள் குழு ஒன்று அஜித்தின் 'துணிவு', விஜயின் 'வாரிசு' இரு படங்களையும் வரவேற்று அஜித், விஜய் இருவரது படங்களையும் போட்டு பதாகை வைத்துள்ளனர். இது இணையத்தில் வைரலாகி வருகிறது. ஆனாலும் சில குசும்பான நெட்டிசன்கள், இந்த பதாகையில் எப்படி தளபதி விஜய் படத்தை இரண்டாவதாகப் போடலாம் எனக் கொளுத்திப் போட்டு விவாதத்தையும் பற்றவைத்துள்ளனர்.