நடிகர்களின் சம்பளத்தைத் தீர்மானிப்பது நட்சத்திர அந்தஸ்துதான் என்று நடிகர் பிருத்விராஜ் தெரிவித்தார்.
முன்னணி ஹீரோக்கள் தங்கள் சம்பளத்தைக் குறைக்க வேண்டும் என்று கேரள பிலிம்சேம்பர் சமீபத்தில் கோரிக்கை வைத்திருந்தது. இதே கோரிக்கை அனைத்து மொழி திரைத்துறையிலும் உள்ளது. இந்நிலையில், மலையாள முன்னணி நடிகரான பிருத்விராஜிடம் இந்தச் சம்பள விவகாரம் பற்றி கேட்டபோது கூறியதாவது:
ஒரு நடிகரின் சம்பளம் அதிகம் என்று நினைத்தால் அவரை வைத்து தயாரிப்பாளர்கள் படம் தயாரிக்க வேண்டாம். படத் தயாரிப்பில் நடிகரும் ஒரு பங்குதாரராக இருக்க வேண்டும் என்று அடிக்கடி நான் நினைப்பது உண்டு. படங்களின் வெற்றி தோல்வியை வைத்தே நடிகர்களின் சம்பளம் நிர்ணயிக்கப்படுகிறது. அப்படித்தான் என் சம்பளமும் இருக்கிறது. நடிகைகளுக்கான சம்பளம் பற்றி கேட்கிறார்கள்.
நாயகனுக்கு இணையான சம்பளம் வாங்கும் உரிமை நடிகைகளுக்கும் இருக்கிறது. ஆனால், நட்சத்திர அந்தஸ்த்துதான் இங்கு சம்பளத்தை தீர்மானிக்கிறது. நான் ’ராவணன்’ படத்தில் நடித்தபோது எனக்கும் ஐஸ்வர்யா ராய்க்கும் ஒரே சம்பளம் அல்ல. ஐஸ்வர்யா ராய் என்னை விட அதிகமாக வாங்கினார். மலையாளத்தில் அதிக சம்பளம் வாங்கும் நடிகை மஞ்சு வாரியர் என்று நினைக்கிறேன். அவருடன் ஒரு புதுமுக நடிகர் இணைந்து நடித்தால், மஞ்சு வாரியரை விட அதிக சம்பளம் கிடைக்குமா?
இவ்வாறு நடிகர் பிருத்விராஜ் கூறினார்.