
’லைகர்’ படத்தை அடுத்து புரி ஜெகநாத்தும் விஜய் தேவரகொண்டாவும் மீண்டும் ஒரு பான் இந்தியா படத்தில் இணைகின்றனர்.
பிரபல தெலுங்கு நடிகர் விஜய் தேவரகொண்டா 'நேட்டோ' படம் மூலம் தமிழுக்கும் வந்த இவர், இப்போது ’லைகர்’ என்ற பான் இந்தியா படத்தில் நடித்து வருகிறார். இதை பிரபல தெலுங்கு இயக்குநர் புரி ஜெகநாத் இயக்குகிறார். இதில் இந்தி நடிகை அனன்யா பாண்டே நாயகியாக நடிக்கிறார். மைக் டைசன் முக்கிய வேடத்தில் நடிக்கிறார். மணி சர்மா இசை அமைக்கும் இந்தப் படத்துக்கு விஷ்ணு சர்மா ஒளிப்பதிவு செய்கிறார்.
புரி ஜெகநாத், இந்தி பட இயக்குநரும் தயாரிப்பாளருமான கரண் ஜோகர், நடிகை சார்மி கவுர், அபூர்வா மேத்தா இணைந்து படத்தைத் தயாரிக்கின்றனர். தெலுங்கு, இந்தியில் உருவாகியுள்ள இந்தப் படம், தமிழ், மலையாளம் உள்ளிட்ட மொழிகளில் டப் செய்யப்பட்டு ஆகஸ்ட் மாதம் வெளியாக இருக்கிறது
இந்நிலையில் புரி ஜெகநாத்தும் விஜய் தேவரகொண்டாவும் மீண்டும் புதிய படம் ஒன்றில் இணைகின்றனர். ஹாலிவுட் தரத்தில் உருவாக இருக்கும் இந்தப் படம் பற்றிய அறிவிப்பை படக்குழுவினர் நாளை வெளியிட உள்ளனர்.