நிறம், தோற்றம் காரணமாக பல வாய்ப்புகளை இழந்தேன்!

‘பாரதி கண்ணம்மா’ வினுஷா தேவி பேட்டி
வினுஷா தேவி
வினுஷா தேவி

விஜய் டிவியில் ‘பாரதி கண்ணம்மா’ சீரியல் முதல் சீசன் முடிந்து தற்போது இரண்டாவது சீசன் ஒளிபரப்பாகி வருகிறது. இதில் முதல் பாகத்தில் பாதியில் ரோஷினி சீரியலில் இருந்து விலகிவிட, கண்ணம்மாவாக நடிகை வினுஷா தேவி இணைந்தார். இரண்டாவது சீசனிலும் கண்ணம்மாவாக நடித்து வரும் அவரிடம் காமதேனுவுக்காக பேசியதிலிருந்து...

பாரதி கண்ணம்மா’ இரண்டாவது சீசனிலும் நீங்கள்தான் நடிக்கிறீர்கள் எனத் தெரிந்தபோது என்ன தோன்றியது?

’பாரதி கண்ணம்மா’வில் மக்கள் என்னை கண்ணம்மாவாக ஏற்றுக் கொண்டதே எனக்கு மிகப்பெரிய மகிழ்ச்சி. கண்ணம்மாவுக்கான வாய்ப்பு வந்தபோது, என்னை ஏற்றுக் கொள்வார்களா என்ற விஷயத்துக்காகதான் தயங்கினேன். ஆனால், அவர்கள் கொடுத்த ஆதரவு பெரிய விஷயம். அப்படி இருக்கும்போது இரண்டாவது சீசனிலும் என்னை அழைத்தபோது, எப்படி மறுப்பேன்? எனக்கான பெரிய அங்கீகாரத்தை அடையாளத்தை கொடுத்த கண்ணம்மா கதாபாத்திரத்தில் தொடர்ந்து நடிப்பதில் மகிழ்ச்சி.

உண்மையைச் சொல்ல வேண்டுமானால், எனக்கும் கண்ணம்மா கதாபாத்திரத்திற்கும் நிஜத்தில் ஒரு ஒற்றுமை உள்ளது. கண்ணம்மா போலவே எனக்கும் சிங்கிள் பேரன்ட்தான். அப்பா இறந்ததும் அம்மா என்னை கஷ்டப்பட்டு தனியாக வளர்த்தார். அவர்தான் எனக்கு மிகப்பெரிய இன்ஸ்பிரேஷன். இந்த ஒரு விஷயமும் எனக்கு ஆரம்பத்தில் இருந்த தயக்கத்தை களைய உதவியது.

மேலும், எந்த நிறத்திற்காகவும் தோற்றத்திற்காகவும் நான் பல வாய்ப்புகளை இழந்தேனோ, அதற்கு முக்கியத்துவம் இருந்ததும் இந்த சீரியல் எனக்குப் பிடிக்கக் காரணம். இன்னொரு விஷயம் சொல்லவா? ‘சுந்தரி’ கதாபாத்திரத்தில் முதலில் நடிக்க எனக்குத்தான் வாய்ப்பு வந்தது. அது அப்பா இறந்த சமயம் என்பதால் என்னால் நடிக்க முடியாமல் போய், கேப்ரியல்லாவை நான்தான் பரிந்துரைத்தேன்.

‘பாரதி கண்ணம்மா’வில் மறக்க முடியாத அனுபவமாக எதைச் சொல்வீர்கள்?

‘கண்ணம்மா’ கதாபாத்திரத்திரத்திற்கு மாநிறம் என்பதும் என்னைத் தேர்ந்தெடுக்க ஒரு காரணம். இந்த சீரியலில் நான் நடிக்க ஆரம்பித்த பிறகு பல கல்லூரி மாணவிகள் எனக்கு சமூக வலைதளங்களில் மெசேஜ் செய்திருந்தார்கள். மாநிறம் என்பதால் பல சமயங்களில் அவர்களை வெளிப்படுத்தி கொள்ளவே தயங்கி இருக்கிறார்கள். ஆனால், என்னை சீரியலில் பார்த்ததும் தங்களது தன்னம்பிக்கை அதிகரித்துள்ளதாக தெரிவித்தார்கள். நானும் ஒரு காலத்தில் என் நிறத்தை அதிகரித்துக் காட்ட ஃபில்டர் போட்டு எடுப்பது போன்ற விஷயங்களை செய்திருக்கிறேன். ஒரு கட்டத்தில் என் தயக்கத்தை உடைத்துத்தான் நான் வந்திருக்கிறேன்.

நடிகை நந்திதா தாஸை எனக்கு மிகவும் பிடிக்கும். அவருடைய ஸ்கின் டோன் அழகாக இருக்கும். இதை எல்லாம் பார்த்துத்தான் என்னை நான் மோட்டிவேட் செய்து கொள்வேன்.

பாரதி கண்ணம்மா’ சீரியலின் தொடக்கத்தில் இருந்தே அதன் கதையை தொடர்ச்சியாக இணையத்தில் கேலி செய்து வருவதை எப்படிப் பார்க்கிறீர்கள்?

நிச்சயமாக கோவம் வரும். நாங்கள் அவ்வளவு கஷ்டப்பட்டு இரவு பகல் பார்க்காமல் வேலை செய்கிறோம். இன்று காலை படப்பிடிப்புக்குச் சென்றேன் என்றால் மறுநாள் காலைதான் வருவேன் எனும் அளவுக்கு கூட நிலைமை இருக்கும். அப்படி இருக்கும்போது கதையைக் கேலி செய்யும்போது வருத்தமாகத்தான் இருக்கும். அது பார்வையாளர்களுடைய கருத்து எனும்போதும், பல சமயங்களில் அது எங்கள் குழுவினருக்கு கஷ்டமாகத்தான் இருக்கும்.

சினிமாவில் ஒரு படம் நடித்தீர்கள். இப்போது சீரியல் மட்டும் போதுமா?

ஒரு படம் நடித்தேன். முன்பே சொன்னதுபோல நிறம், தோற்றம் காரணமாக பல வாய்ப்புகளை இழந்தேன். அதனாலேயே, ஐடியில் வேலை பார்க்கச் சென்றேன். பிறகு ‘பாரதி கண்ணம்மா’ வாய்ப்பு வந்ததும் இதில் மட்டுமே கவனம் செலுத்தி வருகிறேன்.

சமீபத்தில் நடிகை ஷாலினியுடைய விவாகரத்து ஃபோட்டோ ஷூட் விஷயம் வைரலானது பற்றி..?

நடிகை ஷாலினி
நடிகை ஷாலினி

இங்கே எந்த விஷயம் குறித்தும் கருத்துச் சொல்வதற்கும் கொண்டாடுவதற்கும் எல்லோருக்கும் உரிமை உண்டு. நீங்கள் சொல்லும் அந்த ஃபோட்டோ ஷூட் நானும் பார்த்தேன். திருமணம் என்பது எவ்வளவு சந்தோஷமான விஷயமோ அதுபோலவே, விரும்பாத அந்த உறவில் இருந்து விலகுவதும் முக்கியமான விஷயம் தான். மற்றபடி அதை ஃபோட்டோ ஷூட் மூலம்தான் கொண்டாட வேண்டுமா என்று கேட்டால் அது குறித்து எனக்கு கருத்து எதுவும் இல்லை. அது அவரவர் தனிப்பட்ட விஷயம்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in