ஸ்டெம்செல் ஆராய்ச்சியில் டாக்டர் பட்டம் பெற்றதை அடுத்து, தான் சென்னை வந்ததன் நோக்கம் நிறைவேறிவிட்டதாக நடிகை வித்யா பிரதீப் தெரிவித்துள்ளார்.
தமிழில், ’அவள் பெயர் தமிழரசி’, ’பசங்க 2’, மகிழ் திருமேனி இயக்கத்தில் அருண் விஜய் நடித்த ’தடம்’ உட்பட பல படங்களில் நடித்திருப்பவர் வித்யா பிரதீப். இவர், தான் ஸ்டெம்செல் ஆராய்ச்சியில் டாக்டரேட் பெற்றுள்ளதாக தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் தனது சமூகவலைதள பக்கத்தில், ``கடந்த பத்து வருடங்களாக சங்கர நேத்ராலயா கண் மருத்துவமனையில் பணியாற்றி வந்தேன். சென்னைக்கு நான் வந்த காரணம் நிறைவேறிவிட்டது. தற்போது விஞ்ஞானியாகவும் ஆகிவிட்டேன். கடின உழைப்பு, உறுதியோடு, இதற்காக சில தியாகங்களையும் செய்திருக்கிறேன். இந்த இடத்திற்கு வந்திருப்பதன் மூலம் என் பொறுப்பை உணர்கிறேன். இந்த வாய்ப்பை பயன்படுத்தி அறிவியலுக்கும் சமூகத்திற்கும் பயன்படும் வகையில் நேர்மையுடன் பணியாற்றுவேன். முதுகலைக்காக அமெரிக்கா செல்ல இருக்கிறேன்'' என தெரிவித்துள்ளார்.