``மூன்று முறை திருமணம் செய்யும் சூழலில் இருந்த என்னை கடவுள்தான் காப்பாற்றினார்'' என்று பிரபல நடிகை தெரிவித்துள்ளார்.
பிரபல இந்தி நடிகை சுஷ்மிதா சென். இவர், தமிழில்,'ரட்சகன்' படத்தில் நாகார்ஜுனா ஜோடியாக நடித்துள்ளார். ஷங்கரின் 'முதல்வன்' படத்தில் ஷக்கலக்க பேபி பாடலுக்கு ஆடியுள்ளார். முன்னாள் மிஸ் யூனிவர்ஸ் ஆன இவர், 46 வயதாகியும் திருமணம் செய்து கொள்ளாமல் வாழ்ந்து வருகிறார். ரெனி, அலிஷா என்ற இரண்டு குழந்தைகளை தத்தெடுத்து வளர்த்து வருகிறார்.
இந்நிலையில் இந்தி நடிகை , ட்விங்கிள் கண்ணா தொகுத்து வழங்கும் 'தி ஐகான்ஸ்' என்ற நிகழ்ச்சியில் பங்கேற்ற சுஷ்மிதா, திருமணம் செய்துகொள்ளாததற்கான காரணத்தை விளக்கியுள்ளார்.
இதுபற்றி அவர் கூறும்போது, ``அதிர்ஷ்டவசமாக, என் வாழ்வில் சில சுவாரஸ்யமான ஆண்களை சந்தித்திருக்கிறேன். அவர்களால் நான் ஏமாற்றம் அடைந்ததால், திருமணம் செய்து கொள்ளவில்லை. இதற்கும் என் குழந்தைகளுக்கும் எந்த தொடர்பும் இல்லை. என் வாழ்வில் இருந்த ஆண்களை என் குழந்தைகள் மனதார ஏற்றுக் கொண்டனர். அவர்களுக்கு மரியாதையும், அன்பையும் அளித்துள்ளனர். நான் மூன்று முறை திருமணம் செய்யும் சூழலில் இருந்தேன். அதில் இருந்து கடவுள்தான் என்னைக் காப்பாற்றினார். அப்போது நடந்த சிக்கல்களை என்னால் வெளிப்படுத்த முடியாது. என்னையும், எனது குழந்தைகளையும் கடவுள்தான் பாதுகாத்து வருகிறார்" என தெரிவித்துள்ளார் சுஷ்மிதா.