தன் மகள் கார்த்திகாவின் நிச்சயதார்த்தப் புகைப்படங்களை வெளியிட்டு நடிகை ராதா நெகிழ்ச்சியானப் பதிவு ஒன்றைப் பகிர்ந்துள்ளார்.
தமிழ் சினிமாவில் எண்பதுகளில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் நடிகை ராதா. இவரின் மூத்தமகள் கார்த்திகா தமிழில் கே.வி. ஆனந்த் இயக்கத்தில் 'கோ' படம் மூலம் அறிமுகமானார். பின்னர் தமிழ், தெலுங்கு மற்றும் மலையாளத்தில் சில படங்களில் நடித்தவர் திரையுலகில் இருந்து விலகி தன்னுடைய தந்தையின் ஹோட்டல் பிஸினஸில் கவனம் செலுத்தினார்.
இந்நிலையில் கார்த்திகா கடந்த சில வருடங்களாக தன்னுடைய நண்பர் ஒருவரை காதலித்து வருவதாக கூறப்பட்ட நிலையில், இருவீட்டு பெற்றோர் சம்மதத்துடன் இவருக்கு திருமண நிச்சயதார்த்தம் நடந்து முடிந்துள்ளது.
ஏற்கெனவே கார்த்திகா மோதிரம் மாற்றியப் புகைப்படத்தைத் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்ட நிலையில், தற்போது நடிகை ராதா தன்னுடைய மகளின் நிச்சயதார்த்த புகைப்படங்கள் சிலவற்றை வெளியிட்டு உருக்கமானப் பதிவு ஒன்றைப் பகிர்ந்துள்ளார்.
அதில், 'விரைவில் ஒரு புதிய குடும்பத்திற்கு எங்கள் பெண்ணைப் கொடுப்பது பெருமையாக உள்ளது. உனக்கு இந்த அழகான குடும்பத்தைத் தேர்ந்தெடுத்ததற்காக நான் அதிர்ஷ்டசாலி என்று சொல்வேன். திருமணம் என்பது இரண்டு இதயங்கள் தாண்டி, இரண்டு குடும்பங்கள் ஒன்று சேர்வதைப் பற்றியது என்று நான் நம்புகிறேன். நான் மிகவும் மகிழ்ச்சியாக உள்ளேன். உனக்கு அனைத்து நன்மைகளும் ஆசிர்வாதமும் கிடைக்கட்டும்' என கூறியுள்ளார்.