
நடிகை மீனாவின் கணவர் வித்யாசாகர் உடல் நலக்குறைவால் நேற்றிரவு திடீரென மரணம் அடைந்தார். அவரது மறைவு திரையுலகினரை அதிர்ச்சியடைய வைத்துள்ளது.
நடிகை மீனாவுக்கும், பெங்களூருவை சேர்ந்த வித்யாசாகருக்கும் கடந்த 2009-ம் ஆண்டு திருமணம் நடந்தது. இவர்களுக்கு நைனிகா என்ற மகள் உள்ளார். இதனிடையே, கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டிருந்த வித்யாசாகருக்கு நுரையீரல் பாதிப்பு இருந்தது. இந்நிலையில் ஆழ்வார்பேட்டையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த வித்யாசாகர், மேல் சிகிச்சைக்காக மற்றொரு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்றிரவு அவர் உயிரிழந்துள்ளார். இன்று மதியம் 2 மணிக்கு பெசன்ட் நகர் மயானத்தில் உடல் தகனம் செய்யப்படுகிறது.
மீனாவின் கணவர் வித்யாசாகர், தாயார் ராஜ் மல்லிகா, மகள் நைனிகாவுக்கு கரோனா பாதிப்பு ஏற்பட்டிருந்தது. இதில் இரண்டு பேர் தொற்றில் இருந்து மீண்டனர். ஆனால், வித்யாசாகர் கரோனாவுக்கு பலியானார். வித்யாசாகருக்கு நுரையீரல் மாற்று அறுவை சிகிச்சை செய்ய மருத்துவர்கள் முடிவு செய்தனர். அதே நேரத்தில், நுரையீரல் தானம் கிடைப்பதில் தாமதம் ஆனது. இதுவே அவரது இறப்புக்கு காரணம் என்று கூறப்படுகிறது.
நடிகை மீனாவின் கணவர் கரோனா பாதிப்பால் உயிரிழந்த சம்பவம் திரையுலகினர் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.