குழந்தையைத் தத்தெடுத்த விவகாரத்தில் நடிகை தலைமறைவானதால், அவருடைய வீட்டில் போலீஸார் விசாரணை நடத்தினர்.
தெலுங்கு குணசித்திர நடிகை கராத்தே கல்யாணி. 'சங்கர்தாதா எம்.பி.பி.எஸ்', 'லீலா மஹால் சென்டர்', 'சத்ரபதி', 'நேனு லோக்கல்', 'குண்டூர் டாக்கீஸ்' உட்பட பல படங்களில் நடித்துள்ளார். தெலுங்கு பிக்பாஸ் நிகழ்ச்சியிலும் கலந்து கொண்டார். பாஜக பிரமுகரான இவர் ஹைதராபாத் அருகிலுள்ள யூசுப்குடா பகுதியில் வசித்து வருகிறார்.
இவர் கடந்த சில நாட்களுக்கு முன் யூடியூபர் ஸ்ரீகாந்த் ரெட்டி என்பவரை இவர் அடித்த சம்பவம் பரபரப்பானது. இதுகுறித்து போலீஸில் கராத்தே கல்யாணியும், ஸ்ரீகாந்த் ரெட்டியும் மாறி மாறி புகார் தெரிவித்தனர். இந்தச் சம்பவத்தின் போது கல்யாணி, கையில் குழந்தை ஒன்றை வைத்திருந்தார். அது தத்தெடுக்கப்பட்ட குழந்தை என்று கூறப்படுகிறது.
அவர் விதிகளை மீறி அந்தக் குழந்தையைத் தத்தெடுத்ததாக சைல்டு லைனுக்கு புகார் வந்தது. இதனால் குழந்தைகள் நலத்துறை அதிகாரிகள் மற்றும் போலீஸார் அவர் வீட்டுக்கு சென்று விசாரித்தனர். அவரும் குழந்தையும் அங்கு இல்லை. அதனால் அவர் தாய் மற்றும் சகோதரரிடம் அதிகாரிகள் விசாரணை நடத்தினர்.
இதுகுறித்து போலீஸார் கூறுகையில், "சட்ட விதிமுறைகளின்படி குழந்தை தத்தெடுக்கப்படவில்லை என்று புகார் வந்துள்ளது. அதனால் விசாரிக்க வந்தோம். கராத்தே கல்யாணிக்கு போன் செய்தால் அவர் பதிலளிக்கவில்லை. அதனால் அவரையும், குழந்தையையும் தேடி வருகிறோம்" என்றனர். இது தெலுங்கு சினிமாத்துறையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.