
போதையில் தாறுமாறாக கார் ஓட்டி விபத்தை ஏற்படுத்திய நடிகை காதலனுடன் கைது செய்யப்பட்டார்.
திருவனந்தபுரம் தும்பா பகுதியில் உள்ள ஆராட்டுவழியைச் சேர்ந்தவர் அஸ்வதி பாபு (26). மலையாள படங்கள் மற்றும் டிவி தொடர்களில் நடித்துள்ள இவர், கொச்சியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வருகிறார். போதைக்கு அடிமையானவர் இவர் என்று கூறப்படுகிறது. 2018-ம் ஆண்டு, பெண்களை போதைக்கு அடிமையாக்கி பாலியல் தொழில் செய்ததாக இவர் கைது செய்யப்பட்டார்.
வெளியே வந்த பின்பும் அஸ்வதி பாபு, போதைப் பொருள் பயன்படுத்தி வந்ததாகக் கூறப்படுகிறது. இந்நிலையில் நேற்று மாலை கொச்சி குசாட் சந்திப்பு அருகே நடிகை அஸ்வதி பாபு, காதலன் நவுபலுடன் காரில் சென்று கொண்டிருந்தார். இருவரும் போதையில் இருந்துள்ளனர். மற்ற வாகனங்கள் மீது மோதுவது போல அந்த கார் வேகமாகச் சென்றது. அதிர்ச்சியடைந்த வாகன ஓட்டிகள் காவல்துறையினருக்கு தகவல் கொடுத்தனர். இதற்கிடையில் வாலிபர் ஒருவர் பைக்கில் துரத்தி காரை வழிமறித்தார்.
அவரிடம் இருந்து தப்பிப்பதற்காக காரை வேகமாக இயக்கியபோது, கல்லில் மோதி காரின் டயர் வெடித்தது. இதனால் நடிகை அஸ்வதி பாபுவும், நவுபலும் காரில் இருந்து இறங்கி ஓட்டம் பிடித்தனர். சம்பவ இடத்துக்கு வந்த போலீஸார், இருவரையும் கைது செய்தனர். விசாரணையில் இருவரும் போதையில் இருந்தது தெரியவந்தது. இதையடுத்து அவர்கள் கைது செய்யப்பட்டனர்.