
ரசிகர்கள் கேட்டுக் கொண்டதற்கு இணங்க மேடையில் 'புஷ்பா' படத்திலிருந்து 'ஊ சொல்றியா' பாடலை மேடையில் பாடி அசத்தியுள்ளார் ஆண்ட்ரியா.
தென்னிந்தியாவில் கட்டுமானத் தொழிலில் ஈடுபட்டு வரும் ஒலிம்பியா குழுமம் மற்றும் மெர்லின் குழுமம் இந்திய விமான நிலைய ஆணையத்துடன் இணைந்து சென்னை விமான நிலையத்தில் ஏரோஹப் எனப்படும் புதிய வணிக வளாகத்தைத் தொடங்கியுள்ளது. இதற்காக நடைபெற்ற நிகழ்ச்சியை நடிகை ஆண்ட்ரியா ஜெரேமியா தொடங்கி வைத்தார். பின்னர் ஆண்ட்ரியா ஜெரேமியா அங்கு கூடியிருந்த ரசிகர்களின் வேண்டுகோளுக்கிணங்க 'புஷ்பா' திரைப்படத்தின் 'ஊ சொல்றியா' பாடல் பாடி அங்கு இருந்த ரசிகர்களை உற்சாகப் படுத்தினார்.
அல்லு அர்ஜுன் நடிப்பில் வெளியான 'புஷ்பா' படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்புப் பெற்றது. இந்தப் படத்தில் நடித்ததற்காக சிறந்த நடிகருக்கான தேசிய விருது, சிறந்த இசையமைப்பாளருக்கான தேசிய விருது என அல்லு அர்ஜுன் மற்றும் தேவி ஸ்ரீ பிரசாத் இருவரும் பெற்றனர். 'புஷ்பா' படம் வெளியான போது சமந்தா நடனத்தில் ஆண்ட்ரியா குரலில் இந்த பாடல் படத்திற்கு பெரும் எதிர்பார்ப்பைக் கூட்டியிருந்தது குறிப்பிடத்தக்கது. தற்போது அடுத்த வருடம் வெளியாக இருக்கும் 'புஷ்பா2' படத்திற்கான பணிகள் விறுவிறுப்பாக நடந்து வருகிறது.