`இரவு நேரத்தில் போலீஸார் முரட்டுத்தனமாக நடந்துகொண்டது மோசமான அனுபவம்'- நடிகை வேதனை

`இரவு நேரத்தில் போலீஸார் முரட்டுத்தனமாக நடந்துகொண்டது மோசமான அனுபவம்'- நடிகை வேதனை

இரவில், போலீஸார் தங்களிடம் முரட்டுத்தனமாக நடந்துகொண்டதாக பிரபல நடிகை புகார் தெரிவித்துள்ளார்.

தமிழில், வசந்தபாலன் இயக்கிய அரவான், இளையதேவன் இயக்கிய ஞானக்கிறுக்கன் படங்களில் நடித்தவர் அர்ச்சனா கவி. மலையாள நடிகையான இவர், கடந்த 2016-ம் ஆண்டு அபிஷ் மாத்யூ என்பவரை காதலித்து திருமணம் செய்துகொண்டார். 2021-ம் ஆண்டு விவாகரத்து கோரி மனு தாக்கல் செய்துள்ளார். இந்நிலையில் அவர், கொச்சியில் போலீஸார் முரட்டுத்தனமாக நடந்துகொண்டதாகத் தெரிவித்துள்ளார்.

இதுபற்றி அவர் கூறுகையில், ``கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவு 11 மணியளவில், நான், என் குடும்ப நண்பர் ஜெஸ்னா, அவருடைய இரண்டு மகள்களுடன் மிலானாவில் இருந்து ஆட்டோவில் திரும்பிக் கொண்டிருந்தோம். கொச்சி போர்ட் போலீஸார் எங்களை நிறுத்தி கேள்வி கேட்டனர். நாங்கள் அனைவரும் பெண்கள். எங்களிடம் அநாகரிகமாக நடந்துகொண்டனர். அவர்கள் கேள்வி கேட்டதில் நாங்கள் பாதுகாப்பாக உணரவில்லை.

நாங்கள் வீட்டுக்குப் போய்க் கொண்டிருக்கிறோம் என்றதும் ஏன் வீட்டுக்குப் போகிறீர்கள்? என்று கேட்டார்கள். அவர்கள் விசாரித்ததில் எந்த பிரச்சினையும் இல்லை. அது அவர்கள் கடமை. ஆனால், கேள்விகேட்ட முறை, சரியானதாக இல்லை. எந்த வாகனத்தில் வருகிறோம் என்பதை வைத்து போலீஸார், மக்களை எடை போடக் கூடாது. கணிவாக நடந்துகொள்ள வேண்டும். அவர்கள் எங்கள் மீது சந்தேகமடைந்து வீடுவரை பின் தொடர்ந்து வந்தார்கள். அவர்கள் அணுகுமுறையும் நடந்துகொண்ட விதமும் மோசமான அனுபவமாக இருந்தது'' என தெரிவித்துள்ளார். இது தொடர்பாக போலீஸாரிடம் புகார் கொடுக்க இருக்கிறீர்களா என்று கேட்டதற்கு, இல்லை என்றார்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in