
பிரபல நடிகை அமலா பால் பாலி தீவில் ஆன்மிக பயணம் மேற்கொண்டுள்ளது அவரது ரசிகர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதனால் இனி சினிமாவில் நடிக்கமாட்டாரா என்ற கேள்வியும் எழுந்துள்ளது.
கடந்த 2010-ம் ஆண்டு சாமி இயக்கத்தில் நடிகர் ஹரீஷ் கல்யாண் ஜோடியாக 'சிந்து சமவெளி' படத்தின் மூலம் தமிழில் நடிகையாக அறிமுகமானவர் அமலா பால். இவர் விதார்த்துடன் இணைந்து நடித்த 'மைனா' திரைப்படம் இவரை புகழின் உச்சிக்குக் கொண்டு சென்றது. இதன் பின் 'விகடகவி', 'வேட்டை','காதலில் சொதப்புவது எப்படி', 'முப்பொழுதும் உன் கற்பனைகள்', 'தலைவா', 'தெய்வத்திருமகள்', 'கதை திரைக்கதை வசனம் இயக்கம்', 'நிமிர்ந்து நில்', 'வேலையில்லா பட்டதாரி', 'பசங்க 2', 'அம்மா கணக்கு' என ஏராளமான படங்களில் நடித்தார். இந்த நிலையில், இயக்குநர் ஏ.எல்.விஜயை காதலித்து திருமணம் செய்து கொண்டார். 2016-ம் ஆண்டு இவர்களுக்குள் மனமுறிவு ஏற்பட்டது.
இதன் பின் 'ஆடை' உள்ளிட்ட கேரக்டருக்கு முக்கியத்துவம் கொடுக்கும் படங்களில் நடித்தார். ஆனாலும், தமிழில் பெரிதாக அமலாபாலுக்கு வாய்ப்பு கிடைக்கவில்லை. இதன் காரணமாக பிறமொழிப்படங்களில் நடித்து வந்தார். இந்த நிலையில், 'கடவார்' என்ற படத்தை தயாரித்தார். ஆனால், வெளியிடுவதில் சிக்கல் ஏற்பட கடைசியில் ஹாட் ஸ்டார் ஓடிடியில் இப்படம் வெளியானது. இந்த நிலையில் நண்பர் ஒருவர் தனக்கு பாலியல் தொல்லை தந்ததாக விழுப்புரத்தில் அமலாபால் புகார் அளித்தார். இப்பிரச்சினை அவருக்குப் பெரிய மனஉளைச்சலை ஏற்படுத்தியது.
இதனால் மன அமைதிக்காக கோயில்களை நோக்கி அமலா பால் பயணத்தை மேற்கொள்ள ஆரம்பித்தார். திண்டுக்கல் மாவட்டம், பழநி முருகன் கோயிலில் கும்பாபிஷேகம் நடந்த மறுநாளே ரோப்காரில் பயணம் செய்து வழிபாடு நடத்தி தனது ஆன்மிக பயணத்தை அமலா பால் தொடங்கினார். இந்நிலையில், தற்போது இந்தோனேஷியாவில் உள்ள பாலி தீவிற்கு உள்ள ஆசிரமத்திற்கு அமலா பால் சென்றுள்ளார். அங்கு தங்கி தியானம், வழிபாடு, யோகம், போதனை உள்ளிட்ட பல பயிற்சிகளை அவர் பெறுவதாக கூறப்படுகிறது. சுமார் 2 வாரங்கள் அவர் தங்கியிருப்பார் என்று கூறப்படுகிறது.
பாலி தீவில் மனஅமைதியை தேடி, ஆன்மிகத்தை நாடி சென்றுள்ள அமலா பால், மீண்டும் இந்தியா திரும்பிய பின் ஆன்மிக பாதையைத் தேர்வு செய்வார் என்று கூறப்படுகிறது. தனது ஆன்மிக பயணம் குறித்த பதிவை இன்ஸ்டாகிராமில் அமலா பால் பதிவு செய்துள்ளது குறிப்பிடத்தக்கது. இதனால் இனி அமலாபால் சினிமாவில் நடிப்பாரா என்ற கேள்வி அவரது ரசிகர்கள் மத்தியில் ஏற்பட்டுள்ளது.