நடிகை கடத்தல் வழக்கில், நடிகர் திலீப்பின் மனைவி காவ்யா மாதவனிடம் விசாரணை நடத்த இருப்பதாகக் கூறப்படுகிறது.
பிரபல நடிகை, கடந்த 2017-ம் ஆண்டு கேரள மாநிலம் கொச்சியில் கடத்தப்பட்டு பாலியல் வன்கொடுமை செய்த வழக்கு விசாரணை, நடந்து வருகிறது. இந்தச் சம்பவம் இந்தியா முழுவதும் அப்போது பரபரப்பை ஏற்படுத்தியது. இவ்வழக்கில் நடிகர் திலீப் உட்பட 8 பேர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். நடிகர் திலீப் இப்போது ஜாமீனில் இருக்கிறார்.
இந்நிலையில் இந்த வழக்கின் விசாரணை அதிகாரியை கொல்ல சதித்திட்டம் தீட்டியதாக நடிகர் திலீப் மீது அவருடைய நண்பரும் இயக்குநருமான பாலச்சந்திர குமார் கடந்த வருடம் பரபரப்பு குற்றச்சாட்டைக் கூறினார். இதையடுத்து நடிகர் திலீப் உட்பட 6 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த வழக்கை ஏப்ரல் 15-ம் தேதிக்குள் முடித்துவிட கேரள உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இந்நிலையில், இந்த வழக்கில் வரும் திங்கட்கிழமை ஆஜராக, நடிகர் திலீப்புக்கு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ள நிலையில், திலீப்பின் மனைவி காவ்யா மாதவன் உட்பட மேலும் சிலருக்கு சம்மன் அனுப்பி விசாரணை நடத்த அதிகாரிகள் முடிவு செய்துள்ளதாகக் கூறப்படுகிறது.