பா.ரஞ்சித் - விக்ரம் இணையும் புதிய படத்தின் தலைப்பு நாளை இரவு 8 மணிக்கு வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
'பொன்னியின் செல்வன்' படத்தின் மிகப் பெரிய வெற்றிக்குப் பிறகு நடிகர் விக்ரம் தற்போது தனது அடுத்த படத்தின் படப்பிடிப்புக்கு தயாராகி வருகிறார். இயக்குநர் பா.ரஞ்சித் இயக்கும் இந்தப் படத்தை ஞானவேல் ராஜா தயாரிக்கிறார். ஜி.வி.பிரகாஷ்குமார் படத்திற்கு இசையமைக்கிறார். 'சீயான் 61' என அழைக்கப்படும் இப்படம் 1800-ம் ஆண்டு காலக்கட்டத்தை அடிப்படையாக கொண்டு உருவாக்கப்படும் என்றும், படம் 3டியில் வெளியாகும் எனவும் பா.ரஞ்சித் ஏற்கெனவே தெரிவித்திருந்தார். மேலும், கேஜிஎஃப் குறித்த கதை என அவர் கூறியிருந்தது படத்தின் மீதான எதிர்பார்ப்பை மேலும் அதிகரித்துள்ளது.
இப்படத்தின் படப்பிடிப்பு ஆந்திரா மாநிலம் கடப்பாவில் அக்டோபர் 18-ம் தேதி தொடங்கியது. மேலும், படத்தில் கதாநாயகியாக ராஷ்மிகா மந்தனாவை நடிக்க வைப்பதாக கூறப்பட்டது. ஆனால், அவர் ஏற்கெனவே ஒப்பந்தமாகியிருந்த படங்களால் இந்தப் படத்தில் நடிக்க முடியவில்லை. இதனால் மாளவிகா மோகனிடம் பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில், இப்படத்தின் பெயர் அறிவிப்பு நாளை இரவு 8 மணிக்கு வெளியாகும் என இயக்குநர் பா.ரஞ்சித் தனது ட்விட்டர் பக்கத்தில் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்.