நடிகர் விஜய் ஆண்டனியின் மனைவி பாத்திமா தன் மகள் குறித்து முன்பு பகிர்ந்துள்ள ட்வீட் ஒன்று தற்போது வைரலாகி வருகிறது.
பிரபல நடிகரும், இசையமைப்பாளருமான விஜய் ஆண்டனியின் மூத்த மகள் மீரா இன்று அதிகாலை 3 மணியளவில் அதிக மன அழுத்தம் காரணமாக எதிர்பாராத விதமாக தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக தகவல் வெளியானது.
சென்னையில் பிரபலமான தனியார் பள்ளி ஒன்றில் 12ம் வகுப்பு படித்து வரும் மீராவின் இந்த எதிர்பாராத முடிவு பலரையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. இந்நிலையில், அவரது உடல் சென்னை ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனைக்காக வைக்கப்பட்டுள்ளது. ரசிகர்களும், திரையுலகினரும் விஜய் ஆண்டனிக்கு தங்களது ஆறுதலைத் தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில், முன்பு விஜய் ஆண்டனியின் மனைவியும், தயாரிப்பாளருமான பாத்திமா தன் மகள் குறித்து பகிர்ந்துள்ள ட்வீட் ஒன்று வைரலாகி வருகிறது. தனது மகள் விளையாட்டு போட்டியில் வெற்றி பெற்றதற்கு பாத்திமா வாழ்த்து தெரிவித்து, ’என் வலிமைக்கு பின்னால் இருக்கும் சக்தி, என் கண்ணீருக்கு ஆறுதல், அதிகமான குறும்புத்தனத்தால் என் மன அழுத்தத்திற்கு காரணமான என் தங்ககட்டி-செல்லக்குட்டி. மீரா விஜய் ஆண்டனி, வாழ்த்துகள் பேபி’ என்று குறிப்பிட்டுள்ளார். இதனைத் தற்போது சோகத்துடன் பகிர்ந்து, ரசிகர்கள் தங்களது இரங்கல்களையும், ஆறுதலையும் தெரிவித்து வருகின்றனர்.