மகன் சஞ்சய் சினிமாவில் நடிப்பாரா என்ற கேள்விக்கு நடிகர் விஜய் பதில் அளித்துள்ளார்.
நெல்சன் இயக்கத்தில் விஜய் நடித்துள்ள படம், ’பீஸ்ட்’. சன் பிக்சர்ஸ் தயாரித்துள்ள இந்தப் படத்தில் பூஜா ஹெக்டே நாயகியாக நடித்துள்ளார். அனிருத் இசை அமைத்துள்ளார். படம் வரும் 13-ம் தேதி வெளியாகிறது. வழக்கமாக விஜய் படங்களுக்கு மிகப்பெரிய அளவில் பாடல் வெளியீட்டு விழா நடைபெறும். அப்போது நடிகர் விஜய் பரபரப்பாக பேசுவார்.
`பீஸ்ட்' படத்தின் பாடல் வெளியீட்டையும் ரசிகர்கள் ஆவலோடு எதிர்பார்த்தனர். ஆனால், பாடல் வெளியீடு நடத்தவில்லை. அதற்குப் பதிலாக விஜய் அளித்த பேட்டி, சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பானது. பத்து வருடத்துக்குப் பிறகு விஜய் அளித்த பேட்டி இது. அவரை இயக்குநர் நெல்சன் பேட்டி எடுத்தார்.
அப்போது தனது மகன் சஞ்சய் நடிப்பது பற்றி நடிகர் விஜய் கூறுகையில், ``என் மகன் சஞ்சயை சில பேர் நடிக்கக் கேட்டார்கள். நான் அவரிடம் சொல்லிவிடுகிறேன். முடிவு பண்றது அவர்தான் என்றேன். பிரேமம் இயக்குநர் என்னைச் சந்திக்க விரும்பினார். எனக்குத்தான் கதை சொல்லப் போகிறார் என்று நினைத்தேன். ஆனால், சஞ்சய்க்காக ஒரு கதை சொன்னார். பிடித்திருந்தது. சஞ்சயிடம் சொல்லிவிடுகிறேன் என்று சொன்னேன். அதேபோல அவரிடம் சொன்னேன். ‘இப்ப வேண்டாம், இன்னும் 3 வருஷம் ஆகட்டும்’ என்று சஞ்சய் சொல்லிட்டார். அவர் கேமரா பின்னால் நிற்க போறாரா, முன்னால நிற்கப் போறாரா? என்பதை அவர்தான் முடிவு பண்ணணும். அவர் முடிவுக்கு தந்தையாக நான் உதவி பண்ண தயாராக இருக்கிறேன்'' தெரிவித்துள்ளார்.