நடிகர் விஜய் இன்று மீண்டும் தனது விஜய் மக்கள் இயக்க நிர்வாகிகளை சந்தித்து கலந்துரையாடினார்.
தமிழ் திரையிலகில் ஏராளமான ரசிகர்களைக் கொண்ட நடிகர் விஜய், கடந்த 2009-ம் ஆண்டில் அவரது ரசிகர் மன்றங்களை ஒருங்கிணைத்து “விஜய் மக்கள் இயக்கம்” என்ற அரசியல் அமைப்பாக மாற்றினார். அதற்கென கொடியும் அறிமுகப்படுத்தப்பட்டு, அந்த இயக்கம் மக்கள் பிரச்சினைக்கு குரல் கொடுக்க ஆரம்பித்தது. பொதுமக்களுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகளையும் செய்து வருவதுடன், உள்ளாட்சித் தேர்தல் உட்பட தேர்தல் அரசியலிலும் பங்கு பெற்று வருகிறது.
தனது விஜய் மக்கள் இயக்க நிர்வாகிகளை அவ்வபோது சந்தித்து உரையாடுவது அவரின் வழக்கம். அவர் நடித்துள்ள வாரிசு திரைப்படம் விரைவில் வெளியாக உள்ள நிலையில் தனது ரசிகர்களை தொடர்ந்து சந்திப்பதை வாடிக்கையாக வைத்திருக்கிறார்.
சில நாட்களுக்கு முன்பு சென்னை பனையூரில் உள்ள தனது அலுவலகத்தில் சேலம், நாமக்கல், காஞ்சிபுரம் மாவட்டங்களைச் சேர்ந்த விஜய் மக்கள் இயக்க நிர்வாகிகளை சந்தித்து உரையாடினார். அவர்களுடன் புகைப்படமும் எடுத்துக் கொண்டார். அதன்பின்னர் இன்று அரியலூர், பெரம்பலூர், செங்கல்பட்டு ஆகிய மூன்று மாவட்ட நிர்வாகிகளை அவர் சந்தித்தார். அடையாள அட்டை வைத்துள்ள நிர்வாகிகளுக்கு மட்டும் கூட்டத்தில் பங்கேற்க அனுமதி வழங்கப்பட்டது.
வந்திருந்த நிர்வாகிகளிடம் மக்கள் இயக்கத்தின் செயல்பாடுகள் குறித்து கேட்டறிந்து அறிவுரைகளை வழங்கினார். அத்துடன் அவர்களுடன் புகைப்படம் எடுத்துக் கொண்டார். காலை 9 மணிக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்த நிலையில் சுமார் 12 மணி அளவில் விஜய் வந்து கலந்து கொண்டார்.
வெளியில் இருந்து வரும் நிர்வாகிகளுக்கு மதிய உணவு அளிக்க விஜய் உத்தரவிட்டிருந்ததையடுத்து பனையூரில் உள்ள அலுவலகத்தில் நிர்வாகிகளுக்கு விருந்து அளிப்பதற்காக மட்டன் பிரியாணி தயார் செய்யப்பட்டிருந்தது. சந்திப்பு முடிந்தவுடன் அனைவரையும் இயக்க நிர்வாகிகள் சாப்பிட வைத்து அனுப்பி வைத்தனர்.