
‘லியோ’ பட விழாவில் நடிகர் விஜய் அரசியல் வருகைக்கான விஷயங்களை மறைமுகமாகக் குறிப்பிட்டு பேசியிருப்பது ரசிகர்கள் மத்தியில் பேசுபொருளாகி இருக்கிறது.
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிகர் விஜய் நடித்துள்ள ‘லியோ’ படத்தின் வெற்றி விழா நேற்று மாலை சென்னையில் நடந்தது. இதில் ரசிகர்கள் எதிர்பார்த்தது போலவே நடிகர் விஜய், ரஜினியின் ‘காகம்-கழுகு’ குட்டி கதைக்கு பதிலடி கொடுத்து ‘ஒரே சூப்பர் ஸ்டார்தான்’ என இந்த அடுத்த சூப்பர் ஸ்டார் சர்ச்சைக்கும் முற்றுப்புள்ளி வைத்தார்.
ரஜினிக்கு பதிலடி தருவாரா விஜய் என்பதைப் போலவே அரசியல் வருகை குறித்தும் பேசுவாரா என ரசிகர்கள் எதிர்பார்த்திருந்தனர். அதையும் மறைமுகமாக நடிகர் விஜய் தனது பேச்சில் உறுதிப்படுத்தியுள்ளார்.
அந்த வகையில் நடிகர் விஜய் பேசும்போது, ”நான் எப்போதுமே தளபதிதான். தளபதி என்றால் யார்? மன்னன் கீழ் இருந்து சேவை செய்பவன். என்னுடைய மன்னன் நீங்கள்தான். எனக்கு ஆணையிடுங்கள்” எனப் பேசியுள்ளார். மேலும், அவர் பேசிமுடித்ததும் ரேபிட் ஃபயர் நிகழ்வில் தேர்தல் வருடமான 2026ஐ குறிப்பிடும் வகையில் அந்த வருடம் சொன்னதும் என்ன நினைவுக்கு வருகிறது எனக் கேட்கப்பட்டது.
அதற்கு முதலில் விஜய், ‘2025க்கு பிறகு வரும் வருடம், ஃபுட்பால் மேட்ச் நடக்கிறது’ என நகைச்சுவையாகப் பேசினாலும் அடுத்து ‘கப்பு முக்கியம் பிகிலு’ என பதில் கொடுத்துள்ளார். சமீபகாலமாக, மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை வழங்குவது, இரவு நேர பாடசாலை, சட்ட ஆலோசனை மையம் என அரசியல் முன்னெடுப்புகளை செய்யும் விஜய் விரைவில் அரசியல் கட்சி தொடங்க இருக்கிறார் எனவும் சொல்லப்படுகிறது.
அதற்கேற்றாற் போலவே ‘லியோ’ வெற்றி விழா மேடையிலும் அதை சூசகமாக உறுதிப்படுத்தி இருக்கிறார் விஜய். மேலும் நிகழ்வில் கலந்து கொண்ட நடிகர் அர்ஜூன், ‘விஜய் அரசியல் மூலமாக மக்களுக்கு நல்லது செய்ய ஆர்வமாக உள்ளார்’ எனவும், நடிகர் மன்சூர் அலிகான் விஜய் மக்களின் நாளைய தீர்ப்பாக இருக்க வேண்டும் எனவும் கூறியுள்ளார்.
இதையும் வாசிக்கலாமே...
பழம்பெரும் நடிகர் ஜூனியர் பாலையா திடீர் மரணம்!
குட்நியூஸ்: பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கு முக்கிய அறிவிப்பு!
காங்கிரஸில் இணைகிறாரா நடிகை விஜயசாந்தி!?
அதிர்ச்சி! தொடர் மழை... வெள்ளத்தால் நனைத்து வீணாகிப்போன ரூ.400 கோடி வங்கிப் பணம்!
ஆசைப்பட்டா என்ன தப்பு? ரஜினியின் குட்டிக்கதைக்கு பதிலடி கொடுத்த விஜய்!