வெளிநாட்டிலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட காருக்கு வரி செலுத்தவில்லை என நடிகர் விஜய் மீது தொடரப்பட்ட வழக்கை சென்னை உயர் நீதிமன்றம் முடித்து வைத்துள்ளது.
நடிகர் விஜய் கடந்த 2005-ம் ஆண்டு அமெரிக்காவிலிருந்து இறக்குமதி செய்த 63 லட்ச ரூபாய் மதிப்புள்ள பிஎம்டபிள்யூ சொகுசு காருக்கு நுழைவு வரி செலுத்தத் தமிழக அரசின் வணிக வரித்துறை உத்தரவிட்டிருந்தது. இதை எதிர்த்து விஜய் தரப்பில் நீதிமன்றத்தில் முறையீடு செய்யப்பட்டது. நுழைவு வரி வசூல் செய்ய மாநில அரசுக்கு அதிகாரம் இருப்பதாக நீதிபதி தெரிவித்திருந்தார்.
இதையடுத்து 7,98,075 ரூபாய் நுழைவு வரி செலுத்தப்பட்டது. இதனிடையே வரி செலுத்தப்படாத இடைப்பட்ட காலத்திற்கான அபராதமாக 30,23,609 லட்ச ரூபாய் செலுத்த வேண்டும் என வணிக வரித்துறை உத்தரவிட்டது. இதை எதிர்த்து விஜய் தரப்பில் உயர்நீதி மன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.
இந்த வழக்கில் சென்னை உயர் நீதிமன்றம் இன்று தீர்ப்பு வழங்கியது. அதில், “2019 ஜனவரிக்கு முன்பு வெளிநாட்டிலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட காருக்கு முழு நுழைவு வரியையும் செலுத்தி இருந்தால் நுழைவு வரி விதிக்க கூடாது. 2019 ஜனவரிக்கு பின்னும் நுழைவு வரியை முழுமையாக செலுத்தியிருக்காவிட்டால் விஜய்க்கு அபராதம் விதிக்கலாம் ” என நீதிபதி உத்தரவிட்டு இந்த வழக்கை முடித்து வைத்திருக்கிறார். இது விஜய் தரப்பினருக்குப் பெரிய நிவாரணமாக இருக்கும். விஜய் வழக்கைத் தொடர்ந்து ஹாரிஷ் ஜெயராஜ் உள்ளிட்டோரின் வழக்கையும் இது போன்று முடித்து வைக்க நீதிபதி உத்தரவிட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.