'சிறுத்தை' சிவா இயக்கும் 'சூர்யா 42' படத்தில் வரலாற்று கதையில் நடிகர் சூர்யா நடிப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவரான சூர்யாவிற்கு தனி ரசிகர் பட்டாளம் உள்ளது. இவர் நடித்த 'ஜெய்பீம்' படம் திரைத்துறையினர் மத்தியில் மிகப்பெரிய பாராட்டைப் பெற்றுத் தந்தது. அத்துடன் பல்வேறு விருதுகளையும் இப்படம் வென்றுள்ளது. நடிகர் கமல்ஹாசன் நடித்த 'விக்ரம்' படத்தில் ரோலக்ஸ் என்ற கதாபாத்திரத்தில் நடித்த சூர்யாவின் நடிப்பு பரவலாகப் பேசப்பட்டது.
இதனைத் தொடர்ந்து 'சிறுத்தை' சிவா இயக்கத்தில் உருவாகி வரும் ' சூர்யா 42' என்ற படத்தில் நடிகர் சூர்யா நடிக்கிறார். அவருக்கு ஜோடியாக திஷா பதானி நடிக்கிறார். இந்த படத்தில் ஐந்து மாறுபட்ட கதாபாத்திரங்களில் நடிகர் சூர்யா நடிக்கிறார். தற்போதைய காலக்கட்டம் மட்டுமின்றி ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் நடக்கும் கதை என கதைக்களம் உருவாக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
நடிகர் சூர்யாவின் தம்பி கார்த்தி சரித்திரப்படமான பொன்னியின் செல்வனில் நடித்துள்ள நிலையில், அதே போன்ற வரலாற்று கதாபாத்திரத்தில் ' சூர்யா 42' படத்தில் நடிகர் சூர்யா நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது.
இப்படத்தின் படப்பிடிப்பு இம்மாத இறுதியில் சென்னையில் தொடங்குகிறது. அதனைத் தொடர்ந்து இலங்கையில் அடுத்த மாதம் படப்பிடிப்பு நடைபெற உள்ளது. வரலாற்று கதாபாத்திரத்தில் நடிகர் சூர்யா நடிக்க உள்ளது அவரது ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.