‘நேருக்கு நேர்’ முதல் ‘ஜெய் பீம்’ வரை: சூர்யா சாதித்த கதையைச் சொன்ன சிவகுமார்!

‘நேருக்கு நேர்’ முதல் ‘ஜெய் பீம்’ வரை: சூர்யா சாதித்த கதையைச் சொன்ன சிவகுமார்!

நடிகர் அருண் விஜய், அவரது மகன் அர்ணவ் விஜய் மற்றும் நடிகர் விஜயகுமார் என அப்பா, மகன், தாத்தா என மூன்று தலைமுறை இணைந்து நடிக்கும் படம் 'ஓ மை டாக்'. அமேசான் ப்ரைமில் இந்த திரைப்படம் நேரடியாக இந்த மாதம் 21-ம் தேதி வெளியாக இருக்கிறது. சூர்யா ஜோதிகாவின் 2டி நிறுவனம் படத்தைத் தயாரித்திருக்கிறது.

இதனை ஒட்டி நேற்று மாலை சென்னையில் பத்திரிக்கையாளர் சந்திப்பு நடந்தது. இதில் நடிகர் சிவகுமார் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டார்.

'ஓ மை டாக்' படம் குறித்தும் நடிகர் சூர்யாவின் பள்ளி, கல்லூரி வாழ்க்கை, சினிமாவில் முதல் படத்தில் நன்றாக நடிக்காததற்காக எதிர்கொண்ட அவமானங்கள், பின்பு அதே சூர்யா 'ஜெய்பீம்' போன்றதொரு படத்தைத் தயாரித்து பெருமை சேர்த்தது ஆகிய விஷயங்களை சிவகுமார் நெகிழ்வுடன் பகிர்ந்துகொண்டார்.

நிகழ்வில் பேசிய சிவகுமார், “வால்ட் டிஸ்னி நிறுவனத்தின் படைப்புகளைப் போல் குழந்தைகளையும், செல்லப் பிராணிகளையும் மையப்படுத்தி உருவாகியிருக்கும் திரைப்படம் இது. எனக்கும், என்னுடைய நண்பர் விஜயகுமாருக்கும் இடையே 55 ஆண்டுகளுக்கு மேலான நட்பு இருக்கிறது. 1967-ல் ‘கந்தன் கருணை’ படத்தில் முருகனாக வேடமிட்டேன். விஜயகுமார் ஐந்து ஆண்டுகளுக்கு முன்பே சிவாஜி நடிப்பில் வெளியான ‘ஸ்ரீ வள்ளி’ படத்தில் பேபி முருகனாக வேடமிட்டிருக்கிறார். அப்போதே அவருக்கு சிவகுமார் என்று பெயர். நான் சிவகுமார் என்பதால், அவர் தன் பெயரை விஜயகுமார் என மாற்றிக் கொண்டார். அதன்பிறகு ‘பொண்ணுக்கு தங்க மனசு’ என்ற படத்தில் நாங்கள் இருவரும் கதாநாயகர்களாக நடித்தோம். அதன்பிறகு அவரும் நானும் தனித்தனி நாயகனாக நடித்து அவரவர் பாதையில் பயணித்தோம். பின்னர் தேவர் பிலிம்ஸ் தயாரித்த ‘சொர்க்கம் நரகம்’ படத்தில் அவரும் நானும் சேர்ந்து நடித்தோம். கடைசியாக சத்யராஜ் நடித்த ‘மலபார் போலீஸ்’ என்ற படத்தில் இணைந்து நடித்திருக்கிறோம்.

1964-ம் ஆண்டிலேயே நாங்கள் நண்பர்களாக இருந்தோம். இந்தப் படத்தின் சுவாரசியமான விசயமே தாத்தா, மகன், பேரன் என்ற மூவரும் இணைந்து நடிப்பதுதான். இது மிகவும் அபூர்வமான விஷயம். சிவாஜி வீட்டில் பிரபு, விக்ரம் பிரபு இருக்கிறார்கள். ஆனால் மூவரும் இணைந்து நடிக்கும் வாய்ப்பு கிடைக்கவில்லை. தெலுங்கில் நாகேஸ்வரராவ், நாகார்ஜூனா, நாக சைதன்யா மூவரும் இணைந்து ஒரு படத்தில் நடித்தனர். அதன் பிறகு அதனை போல் மூன்று தலைமுறைகள் இணைந்து நடித்த ஒரே திரைப்படம் ‘ஓ மை டாக்’ தான். இதற்காக நான் விஜயகுமாருக்கும், அவரது குடும்பத்தாருக்கும் மனப்பூர்வமான வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்" என்றார்.

மேலும், நடிகர் சூர்யாவின் 'ஜெய்பீம்' படம் வெளியான பின்பு நடந்த விஷயங்களை சிவகுமார் பகிர்ந்துகொண்டார்.

“கடந்தாண்டு ‘ஜெய் பீம்’ வெளியானது. ஒரு சினிமாவை பார்த்துவிட்டு தமிழக அரசு இருளர்கள் எனும் பழங்குடியினர் எங்கெங்கு வசித்து வருகிறார்கள்? என ஒவ்வொரு மாவட்டத்திற்கும் கணக்கெடுக்க வேண்டும் என உத்தரவு பிறப்பிக்கப்படுகிறது. நவம்பர் மாத இறுதிக்குள் பட்டியலைத் தயாரிக்க வேண்டுமென ஆட்சியருக்கு உத்தரவிடுகிறார்கள். அவர்களுக்கு பட்டா வழங்க வேண்டும். குடும்ப அட்டை வழங்க வேண்டும் என உத்தரவிடப்பட்டது. தமிழ்நாட்டு வரலாற்றிலேயே இதுவரை நடக்காத விஷயம். யாருமே அந்தப் படத்தை உருவாக்கும்போது இது நடைபெறும் என்று நினைக்கவில்லை. நடிகர் சூர்யா, நீதியரசர் சந்துருவின் கதாபாத்திரத்தை ஏற்று நடித்தார். என்னுடைய பார்வையில் சூர்யாவின் வாழ்க்கையில் நடித்து உச்சம் தொட்ட படம் 'ஜெய் பீம்' தான்.

எனக்கும் என்னுடைய துணைவியாருக்கும் என்ன ஒரு அதிர்ச்சி என்றால், ‘இந்தப் பையன் என்ன ஆகப் போகிறான்? என்று வருத்தப்பட்ட காலம் அது. சூர்யா ஒரு நாள் முழுவதும் வீட்டில் இருந்தாலும் நாலு வார்த்தை பேசினால் அதிசயம்தான்.

ஹோலி ஏஞ்சல்ஸ் என்ற பள்ளிக்கூடத்திற்கு அவனை மாற்றினோம். அங்கு எல்லாமே ஆங்கிலம்தான். இவனுக்கு தொடர்பில்லாத ஏரியா அது. வகுப்பறையில் நான்காவது வரிசையில் அமர்ந்திருப்பான். ஆசிரியர் கேள்வி கேட்டால், அப்படியே பத்தாவது வரிசைக்குத் தப்பிவிடுவான். பத்தாவது வரிசைக்குக் கேள்வி வரும்போது, அங்கிருந்து மூன்றாவது வரிசையில் வந்து அமர்ந்துவிடுவான். மூன்றாவது வரிசையில் இருக்கும்போது கேள்வி கேட்டால், கடைசி வரிசைக்குச் சென்றுவிடுவான். வாழ்நாள் முழுவதும் கேள்வியில் இருந்து எப்படி தப்பிப்பது என்பதை மட்டும் யோசித்த பையன்.

அந்தப் பள்ளி 100 சதவீத வெற்றியை எதிர்பார்க்கிற பள்ளி. அதனால் எங்களை அழைத்து பேசினார்கள். உங்கள் பையனை வேறு பள்ளியில் படிப்பைத் தொடரச் செய்யுங்கள் என கேட்டுக்கொண்டனர். நாங்களும் வேறு வழி இல்லாமல் செயின்ட் பீட்ஸ் என்ற பள்ளியில் சேர்க்க திட்டமிட்டோம். அந்தப் பள்ளியில் வழக்கம்போல் நன்கொடை கேட்டனர். நாங்களும் வழங்கினோம். அப்போது நான் 175 படங்களில் நாயகனாக நடித்து திரைத் துறையில் உச்சத்தில் இருந்த காலகட்டம். 1980-88 காலகட்டம் என்று நினைக்கிறேன். செயின்ட் பீட்ஸ் பள்ளிக்கூட வாசலில் வேகாத வெயிலில் வரிசையில் நின்று இருக்கிறேன். நான் வரிசையில் நிற்பதை சூர்யா பார்த்துக்கொண்டே இருக்கிறான். இறுதியாக பள்ளிக்கூட முதல்வரைச் சந்தித்தேன். நன்கொடை ஓகே. பள்ளியில் படிப்பதற்கான சீட் கிடைத்த பிறகுதான் நன்கொடையை ஏற்றுக்கொள்வோம் என்றார்.

அந்த நிலையில் வீட்டுக்கு வந்தவுடன் கதறி அழுகிறான். அந்தப் பள்ளிக்கூடத்திற்கு போக மாட்டேன் என்று கதறி அழுகிறான். ‘எங்க அப்பாவைச் சாலையில் நிற்க வைத்துவிட்டார்கள்’ எனக் கதறி அழுது ஆர்ப்பாட்டம் செய்கிறான். அதன்பிறகு அவனை சமாதானம் செய்து பள்ளிக்கூடத்துக்கு அனுப்பி வைத்தோம்.

அதன்பிறகு கல்லூரி படிப்பிற்காக லயோலா கல்லூரிக்குச் சென்றோம். அந்தக் கல்லூரியின் முதல்வரிடம், ‘என் பையனுக்கு காலேஜ் சீட் வேண்டும்’ எனக் கேட்டேன். அதற்கு அவர் ‘ஒரு சீட்டை வீணடிக்காதீர்கள்’ என்று சொன்னார். நான் ஏன் என்று கேட்டேன். ‘நடிகர் பாலாஜி பையன், சிவாஜி பையன் எனத் திரையுலகினர் யாரும் பட்டப்படிப்பை நிறைவு செய்யவில்லை’ எனச் சொன்னார். ஆனால் என் பையன் நிறைவு செய்வான் என உறுதி கூறினேன். அரைகுறை மனதுடன் சம்மதித்து சீட் தந்தார். ஃபர்ஸ்ட் இயர், செகண்ட் இயர் என ஒவ்வொரு வருடமும் அரியர்ஸ் உயர்ந்தது. அப்போது அவனிடம், ‘டிகிரியை முடிக்க வேண்டும் இல்லையென்றால்...’ எனக் கோபமாகச் சொன்னேன். அதன்பிறகு பாடுபட்டு படித்து, பட்டப் படிப்பை நிறைவு செய்தான். அதன் பிறகு அவனிடம் எம்.காம் என்று சொன்னேன். எனக்குப் படிப்பே வேண்டாம் என்று சொல்லிவிட்டான்.

அதன் பிறகு படிப்புக்கும் எனக்கும் சம்பந்தம் இல்லை என்று சொன்ன பையன், தனியார் ஏற்றுமதி நிறுவனத்தில் குறைந்த சம்பளத்திற்கு வேலை செய்தான். அப்போது இயக்குநர் வசந்த் ஒரு நிகழ்ச்சிக்காக மலேசியாவுக்கு செல்ல இருந்தார். அந்த நிகழ்ச்சியில் என்னையும் உடன் அழைத்துச் செல்வதற்காக வீட்டிற்கு வருகை தந்தார். என்னை வீட்டில் இருந்து விமான நிலையத்திற்கு அழைத்துச் செல்வதற்காக சூர்யா காரில் வந்திருந்தார். என்னுடைய டாக்டர் நண்பர் ஒருவர், ‘அவர் சிவகுமாரின் பையன் சரவணன்’ என இயக்குநர் வசந்த்திடம் அறிமுகப்படுத்தினார். பிறகு ஒரு வாரம் கழித்து என்னைத் தொடர்புகொண்டு, ‘சார் உங்கள் பையனை நாயகனாக அறிமுகப்படுத்த சம்மதமா?’ எனக் கேட்டார். அப்போது அவரிடம், ‘அவனுக்கு அதுபோன்ற எண்ணம் எதுவும் இல்லை. அவனுக்கு நடனமாடத் தெரியாது. சண்டை காட்சிகளில் நடிக்கத் தெரியாது. தொடர்ச்சியாக எங்களிடமே நாலைந்து வார்த்தை பேசமாட்டான்’ எனச் சொன்னேன். ‘எனக்கும் இதுபோன்ற குணமான பையன்தான் வேண்டும்’ என்றார்.

டெஸ்ட் ஷூட்டிற்காக மணிரத்னம் அழைத்ததாக வசந்த் அழைத்துச் சென்றார். அப்போதும் கூட அவரிடம், ‘அவன் வாழ்க்கையே நாசம் செய்துவிடாதீர்கள்’ என்றுதான் அறிவுறுத்தினேன். பிறகு வசந்த் இயக்கத்தில் படப்பிடிப்பு நடந்தது. அந்தப் படப்பிடிப்புக்கு ஒரு நாளும் நான் செல்லவில்லை. என்னுடைய துணைவியார்தான் சென்று வந்தார். அந்தப் படம் வெளியானது. நான் அப்போது படப்பிடிப்பிற்காக ஆலப்புழையில் இருந்தேன். அந்தப் படம் காசி திரையரங்கில் வெளியானது. முதல் காட்சி நிறைவடைந்த பின், சூர்யா மிகுந்த பதற்றத்துடன் அங்கு நின்றிருந்தான். அங்கிருந்த ஒருவர் கைகொடுத்து கைகுலுக்கி ‘சூப்பராக சொதப்பி விட்டீர்கள்’ என விமர்சனம் செய்தார். சூர்யா அதிர்ச்சியில் உறைந்து நின்றான்.

ஆறு மணி காட்சி, அதன்பிறகு இரவு காட்சி என அடுத்தடுத்து இரண்டு காட்சிகள் படத்தைப் பார்க்கிறான். அதன்பிறகு எனக்கு போன் செய்து, ‘அது நானாப்பா.. நானா அப்பா அது.. வசந்த் சார் பத்து கெட்ட வார்த்தையைப் பயன்படுத்தினார். அவர் இன்னும் நூறு கெட்ட வார்த்தையை பயன்படுத்தி இருக்கலாம். டொரன்டோவிலிருந்தும்..., வாஷிங்டனிலிருந்து போன் செய்தார்கள். பார்த்தேன் பல காட்சிகளில் நான் சிறப்பாக நடிக்கவில்லை’ என்றான்.

திரையுலகில் ஒன்றுமே தெரியாமல் நுழைந்த பையன். வரிசையாக இரண்டு மூன்று படங்கள் தோல்வி அடைந்தன. எட்டாவது படத்தில் பாலா என்ற ஒரு படைப்பாளி வந்து சூர்யாவைச் செதுக்கினார்.

இந்தப் பையன் தற்போது ‘ஜெய் பீம்’ என்றொரு படத்தைத் தயாரித்து, நடித்து உலகத்தையே ஜெயிக்கிறான். இது என்னால் கற்பனைகூட செய்து பார்க்க முடியவில்லை. இதெல்லாம் எனக்கு ஒரு கனவு போல் இருக்கிறது. இதெல்லாம் நம்மைவிட மேலேயிருந்து ஒருவன் பார்க்கிறான். அவன்தான் தீர்மானிக்கிறான். இவர்கள் இருவரும் அடைந்த உயரத்திற்கு மனித முயற்சி மட்டும் காரணம் அல்ல. அதையும் கடந்து இறைவனின் ஆசி இருக்கிறது என நம்புகிறேன். இதேபோல் இந்தப் படமும் வெற்றி அடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திக்கிறேன்” என்றார் சிவகுமார்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in