தென்னிந்திய நடிகர் சங்க கட்டிடம்... சிவகார்த்திகேயன் ரூ. 50 லட்சம் நிதியுதவி!

நடிகர் சிவகார்த்திகேயன்
நடிகர் சிவகார்த்திகேயன்

தென்னிந்திய நடிகர் சங்கத்தின் புதிய கட்டிடத்திற்காக நடிகர் சிவகார்த்திகேயன் வைப்பு நிதியாக ரூ. 50 லட்சத்திற்கான காசோலையை வழங்கி உள்ளார். இதற்காக நடிகர் சங்கம் சிவகார்த்திகேயனுக்கு நன்றி தெரிவித்துள்ளது.

பொருளாதாரப் பிரச்சினையால் தடைபட்ட தென்னிந்திய நடிகர் சங்க கட்டிடப் பணிகள் நேற்று மீண்டும் பூஜையுடன் தொடங்கியது. இந்நிகழ்வில் நடிகர் சங்க தலைவர் நாசர், பொருளாளர் கார்த்தி, துணைத் தலைவர் பூச்சி முருகன் உள்பட முக்கிய பொறுப்பாளர்கள் கலந்து கொண்டனர். தென்னிந்திய நடிகர் சங்க கட்டிடத்தை கட்டி முடிப்பதற்கு சுமார் 40 கோடி ரூபாய் தேவைப்படுவதாக முன்பு கணக்கிடப்பட்டது.

இதற்கான நிதியை நடிகர்கள், நடிகைகள் உள்ளிட்டோர் வழங்கி வருகின்றனர். அந்த வகையில், சங்கத்தின் உறுப்பினர் சிவகார்த்திகேயன் நடிகர் சங்க புதிய கட்டிடப் பணிகளை தொடர்வதற்காக சங்கத்தின் வைப்பு நிதியாக தனது சொந்த வருமானத்திலிருந்து ரூபாய் 50 லட்சத்திற்கான காசோலையை தென்னிந்திய நடிகர் சங்க தலைவர் நாசர் மற்றும் பொருளாளர் கார்த்தியிடம் வழங்கினார். இதற்காக சிவகார்த்திகேயனுக்கு தென்னிந்திய நடிகர் சங்கம் நன்றி தெரிவித்துள்ளது.

முன்னதாக, கடந்த மார்ச் மாதத்தில் தென்னிந்திய நடிகர் சங்க கட்டிடத்திற்காக நடிகர் விஜய் ரூ. 1 கோடி நிதியளித்தார். நடிகர் கமல்ஹாசனும் புதிய நடிகர் சங்க கட்டிட மேம்பாட்டுக்காக ரூ.1 கோடிக்கான காசோலையை வழங்கினார்.

தொடர்ந்து, சங்கத்தின் ஆயுட்கால உறுப்பினர் என்ற முறையில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலினும் ரூ. 1 கோடி கொடுத்தார். இந்தக் கட்டிடத்திற்கு மறைந்த தேமுதிக தலைவர் நடிகர் விஜயகாந்த் பெயர் வைக்கப்படுமா என்பது ரசிகர்களின் கேள்வியாக உள்ளது. இதனை சங்க உறுப்பினர்கள் இன்னும் உறுதிப்படுத்தவில்லை.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in