தனது மனைவி ஆர்த்தியுடன் வளசரவாக்கத்தில் உள்ள பள்ளியில் காலை 7 மணியளவில் நடிகர் சிவகார்த்திகேயன் வாக்களித்துள்ளார்.
மக்களவை தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று காலை ஏழு மணிக்குத் தொடங்கியது. 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு வாக்குப்பதிவு நடைபெறவுள்ள நிலையில் காலை முதலே பொதுமக்கள் வாக்களிப்பதில் ஆர்வம் காட்டி வருகின்றனர்.
பொதுமக்களோடு திரைப்பிரபலங்களும் ஏழு மணி முதலே வாக்களிக்கத் தொடங்கியுள்ளனர். இதில் முதல் நபராக நடிகர் நடிகர் அஜித் திருவான்மியூரில் வாக்குப்பதிவு செய்தார். இவரைத் தொடர்ந்து நடிகர் சிவகார்த்திகேயனும் தனது மனைவி ஆர்த்தியுடன் வாக்குப்பதிவு செய்துள்ளார்.
சென்னை, வளசரவாக்கத்தில் உள்ள குட் ஷெப்பர்ட் மெட்ரிகுலேசன் உயர்நிலை பள்ளியில் காலை 7 மணிக்கு வரிசையில் நின்று தனது வாக்கினைப் பதிவு செய்தார். அவருடன் அவரது மனைவி ஆர்த்தியும் வாக்களிக்க வந்தார்.
வாக்களித்த பின்பு ஊடகங்களிடம் பேசிய அவர், "இளைஞர்கள் தேர்தலை திருவிழா போலக் கொண்டாட வேண்டும். வாக்களிப்பது அரைமணி நேரம், 15 நிமிட வேலைதான். அதனால், மனசாட்சியோடு சிந்தித்து வாக்களியுங்கள். முதல் முறை வாக்களிப்பவர்கள் இங்கு பணிபுரிபவர்களை மதித்து, உங்கள் அனுபவத்திற்காக வாக்களியுங்கள்" என்றார்.