நடிகர் சிவாஜியின் மகன், பேரனுக்கு பிடிவாரண்ட்: காசோலை மோசடி வழக்கில் கோர்ட் அதிரடி

ராம்குமார், துஷ்யந்த்
ராம்குமார், துஷ்யந்த்

காசோலை மோசடி வழக்கில் நடிகர் சிவாஜி கணேசனின் மகன் ராம்குமார், பேரன் துஷ்யந்துக்கு சென்னை சைதாப்பேட்டை நீதிமன்றம் பிடிவாரண்ட் பிறப்பித்துள்ளது.

சென்னை மயிலாப்பூரைச் சேர்ந்த தனபாக்கியம் எண்டர்பிரைசஸ் நிறுவனத்தின் நிர்வாக பங்குதாரரான அக்‌ஷய் சரின் தாக்கல் செய்துள்ள மனுவில்," ராம்குமாரின் மகன் துஷ்யந்த் மற்றும் அவரது மனைவி அபிராமி ஆகியோர் நிர்வகிக்கும் ஈசன் புரொடக்சன்ஸ் நிறுவனத்துடன் வர்த்தக தொடர்பு வைத்திருந்தோம். வியாபார நடவடிக்கைகளுக்காக துஷ்யந்த் சார்பில் தலா 15 லட்சம் ரூபாய்க்கான இரண்டு காசோலைகள் கடந்த 2019-ம் ஆண்டு அளிக்கப்பட்டது. ஆனால், போதிய பணம் இல்லாததால் இரண்டு காசோலைகளும் திரும்பி வந்துவிட்டன.

வங்கிக் கணக்கில் பணம் இல்லாதது தெரிந்தும் வேண்டுமென்றே காசோலை அளித்ததுடன், இதுதொடர்பாக அனுப்பப்பட்ட வக்கீல் நோட்டீஸ்க்குப் பதிலளிக்காததுடன், எங்களது பணத்தையும் திரும்ப அளிக்கவில்லை. எனவே, ராம்குமாரின் மகன் துஷ்யந்த், அவரது மனைவி அபிராமி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். அத்துடன் தனது மகன் துஷ்யந்த் கொடுக்க வேண்டிய பணத்திற்குப் பொறுப்பேற்பதாக ராம்குமார் உத்தரவாதம் அளித்துள்ளதால் அவர் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்று மனுவில் கூறப்பட்டிருந்தது.

இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம், நடிகர் சிவாஜி கணேசனின் மகன் ராம்குமார், அவரது பேரன் துஷ்யந்த், பேரனின் மனைவி அபிராமி ஆகியோர் மீது ஜாமீனில் வெளிவரக்கூடிய பிடிவாரண்ட் பிறப்பித்து, வழக்கு விசாரணையை பிப்ரவரி 14-ம் தேதிக்கு தள்ளிவைத்துள்ளது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in