'தட்டி விட நிறைய பேர் இருக்கிறார்கள்; தட்டிக் கொடுக்க யாரும் இல்லை' - சிம்புவின் புதிய அவதாரம்

சிம்பு
சிம்பு'தட்டி விட நிறைய பேர் இருக்கிறார்கள்; தட்டிக் கொடுக்க யாரும் இல்லை' - சிம்புவின் புதிய அவதாரம்

தான் நடித்துள்ள 'பத்து தல' படத்தின் இசை வெளியீட்டு விழாவில் கலந்து கொண்டு பேசிய நடிகர் சிம்பு, இனி பேசுவதற்கு எதுவும் இல்லை எல்லாமே செயல் தான் என்று ரசிகர்களுக்கு தெரிவித்துள்ளார்.

ஓபிலி கிருஷ்ணா இயக்கத்தில் சிம்பு நடித்துள்ள ‘பத்து தல’ படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் நேற்று நடைபெற்றது. அங்கே வருகை தந்த சிம்புவுக்கு அவரது ரசிகர்கள் அதிக உற்சாகத்தோடு வரவேற்பளித்தனர். அந்த உற்சாகம் நடிகர் சிம்புவையும் தொற்றிக் கொண்டது. தான் பாடிய லூசுப் பெண்ணே பாடலை மேடையில் பாடி, ஆடிய அவர் ரசிகர்களை ஏகத்துக்கும் உற்சாகப்படுத்தினார்.

அந்த விழாவில் பேசிய சிம்பு முற்றிலும் மாறுபட்டவராக அவரது ரசிகர்களுக்கு காட்சியளித்தார். அவரது பேச்சில் முதிர்ச்சி தெரிந்தது.  "படங்களில் சின்ன சென்டிமென்ட் காட்சி வந்தால்கூட அழுது விடுவேன். ஆனால் உங்களுக்காக தான் இன்று அழக்கூடாதுனு நினைத்தேன். ஏனென்றால் நாம் நிறைய கஷ்டங்களை பார்த்தோம். இனிமே சந்தோஷமாக இருக்க வேண்டும்.

சிறிய படம், பெரிய படம் எதுவாக இருந்தாலும் எனக்கு பிடித்திருந்தால் அந்தப் படத்தில் நடித்தவர்களை கூப்பிட்டு பாராட்டும் பழக்கம் எனக்குண்டு. ஏனென்றால் இங்கே  தட்டி விடுவதுக்கு நிறைய பேர் இருக்கிறார்கள். ஆனால் தட்டிக் கொடுப்பதற்கு யாரும் இல்லை. எனக்கு தட்டிக்கொடுக்க என் ரசிகர்கள் மட்டும்தான் உள்ளனர்.

கௌதம் கார்த்திக் ஒரு நல்ல பையன். தங்கமான பையன். அந்த பையன் நிறைய பிரச்னைகளை சந்தித்துதான் இந்த இடத்துக்கு வந்துள்ளார். எனக்கு இந்தப் படம் வெற்றிப்படமாக அமைகிறதோ இல்லையோ, அவருக்கு இந்தப் படம் மிகப்பெரிய வெற்றிப்படமாக அமையும். கெளதமிற்காக மட்டுமே இந்தப் படத்தை முடித்துக்கொடுக்க வேண்டும் என்று எண்ணினேன்.

இந்த படத்தில் எனக்கு ஜோடி இல்லை. படத்திலும் இல்லை நிஜத்திலும் இல்லை. ஏ.ஆர் ரஹ்மான் சார் என் காட்ஃபாதர். ஒரு சிஷ்யனாக அவருக்கு என் மேலே உள்ள அன்பை காப்பாற்றுவேன். ஆன்மிக வழியிலும் அவர் எனக்கு குருவாக இருந்துள்ளார். எல்லோரும் என்னிடம், 'முன்னாடி உங்கள் பேச்சில் ஒரு எனர்ஜி இருக்கும். இப்போது எல்லாம் சாஃப்டாக பேசுகிறீர்கள் என்று  கேட்கிறார்கள். அதற்கு ஒரு காரணம் உள்ளது.

முன்பெல்லாம் 'நான் யாருனு தெரியுமாடானு' என்ற அளவுக்கு பேசியிருக்கிறேன். ஒப்புக் கொள்கிறேன். அப்போது நிறைய கஷ்டத்தில் இருந்தேன். இனி நான் சினிமாவில் இருக்க மாட்டேன், என் கதை முடிந்துவிட்டது எனப் பேசினார்கள்.

அந்த நேரத்தில் நான்தான் எனக்கு துணையாக இருந்தேன். அதனால்தான் அதுபோன்ற கத்தி பேசுவது எல்லாம் நடந்தது. 'மாநாடு' படத்தை கொண்டாடி, 'வெந்து தணிந்தது காடு' படத்தில் என் நடிப்பை பாராட்டி, இதோ இப்போது இந்த மேடையில் கொண்டுவந்து என்னை நிறுத்தியுள்ளீர்கள். அப்புறம் எப்படி கத்தி பேச முடியும் பணிந்துதான் பேச முடியும்.

இனி பெரிதாக பேசுவதற்கெல்லாம் ஒன்றும் இல்லை; செயல் மட்டும்தான். இனிமேல் ரசிகர்கள் சந்தோஷமாக இருக்கலாம். மற்றவற்றை நான் பார்த்துக்கொள்கிறேன். இனிமே நான் என்ன பண்ணுகிறேன் என்பதை மட்டும் பாருங்கள். சாதாரணமாக வரவில்லை. வேறு மாதிரி வந்துள்ளேன். இனிமேல் உங்களை தலை குனிய விடமாட்டேன்'' என்று சிம்பு  பேசினார்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in