
``இந்த வாய்ப்பு எல்லோருக்கும் கிடைக்காது'' என நடிகர் சிவராஜ்குமார் நெகிழ்ந்துள்ளார்.
நடிகர் ரஜினிகாந்த்தின் ‘ஜெயிலர்’ படத்தில் கன்னட நடிகர் சிவராஜ்குமார் கேமியோவில் நடித்திருந்தார். அவரது கதாபாத்திரம் ரசிகர்கள் மத்தியில் கொண்டாடப்பட்டது. இந்த நிலையில், இன்று சென்னை விமானநிலையத்தில் பத்திரிகையாளர்களின் கேள்விகளுக்கு பதிலளித்தார். அவர் பேசியதாவது, “நான் மைசூரில்தான் ‘ஜெயிலர்’ படம் பார்த்தேன். இந்த வரவேற்பை நான் எதிர்பார்க்கவில்லை. ஒரே படத்தில் மூன்று சூப்பர் ஸ்டார்கள் இணைந்து வேலை பார்த்தது பெரிய விஷயம். இந்த வாய்ப்பு அனைவருக்கும் கிடைக்காது. அப்படி கிடைக்கும் போது அதை விட்டு விடக்கூடாது.
சென்னையில்தான் பிறந்து வளர்ந்தேன். தமிழ் மக்கள் இப்படியான வரவேற்பை எனக்கு கொடுத்திருப்பது ஆசிர்வாதமாக நினைக்கிறேன். அடுத்து தனுஷூடன் ‘கேப்டன் மில்லர்’ படத்தில் நடித்திருக்கிறேன். அதுவும் நன்றாக வந்திருக்கிறது" என்றார்.