நடிகர் சந்தானம் எப்போதும் என் ’நண்பேன்டா’ பார்த்தா தான் என உதயநிதி ஸ்டாலின் தெரிவித்தார்.
சர்க்கிள் பாக்ஸ் என்டர்டெயின்மென்ட் சார்பில் ராஜ் நாராயணன் தயாரித்துள்ள படம், ’குலு குலு’. ’மேயாத மான் ’இயக்குநர் ரத்னகுமார் இயக்கியுள்ள இந்தப் படத்தில் சந்தானம் நாயகனாக நடித்துள்ளார். அதுல்யா சந்த்ரா, நமீதா கிருஷ்ணமூர்த்தி, பிரதீப் ராவத், மரியம் ஜார்ஜ், ‘லொள்ளு சபா‘ மாறன் உள்பட பலர் நடித்துள்ளனர்.
விஜய் கார்த்திக் கண்ணன் ஒளிப்பதிவு செய்துள்ள இந்தப் படத்துக்கு சந்தோஷ் நாராயணன் இசை அமைத்துள்ளார். ஜூலை 29-ம் தேதி வெளியாகும் இந்தப் படத்தை ரெட் ஜெயன்ட் நிறுவனம் தமிழகமெங்கும் வெளியிடுகிறது.
இந்தப் படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பில், நடிகர் சந்தானம் கூறியதாவது: இந்த படத்தை பார்த்து உதயநிதி கொடுத்த பரிந்துரைகள் ஒரு இயக்குநருக்கான பார்வையில் இருந்தது. இந்த கதையை ரத்னகுமார் கூறும் போது எனக்கு பிடித்திருந்தது. சந்தோஷ் நாராயணன் எனக்கு செட்டாகும் இசையை ஹிட்டாகும்படி தந்திருக்கிறார். இவ்வளவு குறுகிய பட்ஜெட்டில், நிறையை இடங்களில் படம் எடுப்பது ரத்னகுமாரால் மட்டுமே முடியும். ஒரு குழு முயற்சியாக இந்தப் படம் உருவாக்கப்பட்டுள்ளது. படம் எல்லோருக்கும் பிடிக்கும்’’ என்றார்.
நடிகர் உதயநிதி ஸ்டாலின் பேசும்போது, ‘’நான் இங்கு வந்தது தயாரிப்பாளராக, நடிகராக அல்ல. எப்போதும் என் ’நண்பேன்டா’ பார்த்தா தான், சந்தானம். அவரால் தான் என்னை நடிகனாக மக்கள் ஏற்றுக் கொண்டார்கள். இந்தப் படம் நான் பார்த்துவிட்டேன். படம் சிறப்பாக வந்துள்ளது. படத்தை இயக்குநர் ரத்னகுமார் எடுக்கிறார் என்பதால் படம் பார்க்காமலே, இந்த படம் சிறப்பான ஒன்றாக இருக்கும் என நம்பினேன். இந்த படத்தில் சந்தானம் மட்டுமல்லாமல் அனைவரும் ரசிக்க வைத்துள்ளனர். இந்த படம் சந்தானத்துக்கு வெற்றிப்படமாக அமையும்’’ என்றார்.