
ஒவ்வொரு வருடமும் நடிகர் ரஜினிகாந்த் இல்லத்தில் நவராத்திரி கோலாகலமாகக் கொண்டாடப்படுவது வழக்கம். அந்த வகையில் நவராத்திரி கொண்டாட்டத்தின் கடைசி நாளான நேற்று சென்னை போயஸ் கார்டனில் உள்ள நடிகர் ரஜினிகாந்த் வீட்டில் நவராத்திரி சிறப்பு வழிபாடு நடைபெற்றுள்ளது.
ரஜினி வீட்டில் நடைபெற்ற நவராத்திரி கொண்டாட்டத்தில் ஏராளமான சினிமா மற்றும் அரசியல் பிரபலங்கள் கலந்துகொண்டனர். நடிகர் ரஜினிகாந்த் 'தலைவர் 170' படத்தின் படப்பிடிப்பிற்காக மும்பை சென்றுள்ளதால், அவர் இந்த நவராத்திரி கொண்டாட்டத்தில் கலந்து கொள்ளவில்லை.
தெலங்கானா மற்றும் புதுச்சேரி ஆளுநர் தமிழிசை செளந்தரராஜன் இந்த நவராத்திரி கொண்டாட்டத்தில் கலந்துகொண்டார். அதேபோல் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினின் மனைவி துர்கா ஸ்டாலினும் கலந்து கொண்டார். இதுமட்டுமல்லாது, முன்னாள் தமிழக முதல்வர் ஓ.பன்னீர் செல்வமும் மற்றும் முன்னாள் சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் ஆகியோரும் இந்த விசேஷத்தில் கலந்து கொண்டனர்.
சினிமா பிரபலங்களை பொறுத்தவரை நடிகர் விஜய்யின் தாயார் ஷோபா சந்திரசேகர், நடிகை லதா, மீனா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
நிகழ்வில் கலந்து கொண்டவர்களுக்கு லதா ரஜினிகாந்த், அவரது மகள்கள் செளந்தர்யா, ஐஸ்வர்யா ஆகியோர் குடும்பத்துடன் பரிசுகள் வழங்கி சிறப்பித்தனர்.