இயக்குநர் பா.ரஞ்சித் படத்தை பார்த்து விட்டு நடிகர் ரஜினிகாந்த் பாராட்டியுள்ளார்.
கடந்த சில நாட்களுக்கு முன்பு இயக்குநர் பா.ரஞ்சித்துடைய ’நட்சத்திரம் நகர்கிறது’ திரைப்படம் வெளியானது. காளிதாஸ் ஜெயராம், துஷாரா விஜயன், கலையரசன் உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். படம் விமர்சன ரீதியாக நல்ல வரவேற்பையும், விவாதத்தையும் தொடங்கி வைத்தது. இதனை அடுத்து நடிகர் ரஜினிகாந்த் ‘நட்சத்திரம் நகர்கிறது’ படத்தை பார்த்து விட்டு இயக்குநர் பா.ரஞ்சித்தை தொலைபேசியில் அழைத்து பாராட்டி உள்ளார்.
நடிகர் ரஜினிகாந்த்தின் இந்த பாராட்டை இயக்குநர் பா.ரஞ்சித் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். ’நடிகர் ரஜினிகாந்த் அவர்கள் படத்தை பார்த்து விட்டு கொடுத்த பாராட்டு எனக்கு மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது. இயக்கம், திரைக்கதை, நடிகர்கள் தேர்வு, கலை, ஒளிப்பதிவு, இசை என அனைத்து விதத்திலும் இது உங்களுடைய சிறந்த பணி என்று அவர் கூறினார். உங்களுக்கு என்னுடைய நன்றி சார்’ என அந்த பதிவில் நடிகர் ரஜினிகாந்த்தின் வார்த்தைகளை கூறி நெகிழ்ந்துள்ளார் இயக்குநர் பா.ரஞ்சித்.
நடிகர் ரஜினிகாந்த்தினை வைத்து ஏற்கெனவே இயக்குநர் பா.ரஞ்சித் ‘காலா’, ‘கபாலி’ ஆகிய படங்களை இயக்கி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.