லைகா புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில் அடுத்தடுத்து இரண்டு படங்கள் நடிக்க நடிகர் ரஜினிகாந்த் ஒப்பந்தமாகியுள்ளார்.
நடிகர் ரஜினிகாந்த் தற்போது நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் ‘ஜெயிலர்’ படத்தில் நடித்து வருகிறார். இதனையடுத்து அவருடைய படங்களை இயக்க போகும் இயக்குநர் யார் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே இருந்தது.
தற்போது ரஜினிகாந்த்தின் அடுத்த படம் குறித்தான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. லைகா தயாரிப்பில் நடிகர் ரஜினிகாந்த் இரண்டு படங்கள் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். இதில் ஒரு படத்திற்கான பூஜை மிக பிரம்மாண்டமாக சென்னையில் வருகிற நவம்பர் 5-ம் தேதி நடைபெற உள்ளதாக லைகா நிறுவனத்தின் தமிழ்ப் பிரிவு தலைமை அதிகாரி தமிழ்க்குமரன் தெரிவித்துள்ளார்.
ஏற்கெனவே, ‘டான்’ படம் மூலம் 100 கோடி வசூலை நெருங்கி வெற்றிப் படத்தைக் கொடுத்த இயக்குநர் சிபி சக்ரவர்த்தி, ரஜினிகாந்த்தை இயக்குவார் என்ற செய்தி வெளியானது. பூஜை நடக்கும் நவம்பர் 5-ம் தேதி அன்று இது குறித்தான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என எதிர்ப்பார்க்கலாம். ரஜினிகாந்த் படம் தவிர்த்து ‘நாய் சேகர் ரிட்டர்ன்ஸ்’, ‘பொன்னியின் செல்வன் 2’ என ரசிகர்கள் எதிர்பார்ப்பில் இருக்கும் படங்கள் லைகா நிறுவனம் கைவசம் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.