பண மோசடி வழக்கில் பிரபல நடிகர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கன்னட சினிமாவில் தயாரிப்பாளராகவும் நடிகராகவும் இருப்பவர் வீரேந்திர பாபு. இவர் ’ஸ்வயம் குருஷி’ என்ற படத்தைத் தயாரித்து நடித்துள்ளார். இவர், ராஷ்டிரிய ஜனஹிதா பக்சா (Rashtriya Janahita Paksha) என்ற கட்சியையும் நடத்தி வருகிறார். வரும் சட்டப்பேரவை தேர்தலில் எம்.எல்.ஏ. பதவிக்கு போட்டியிட சீட் கொடுப்பதாகவும் மாவட்டச் செயலாளர் உள்ளிட்ட பதவிகள் தருவதாகவும் கூறி, நடிகர் வீரேந்திர பாபு, பலரிடம் பணம் வசூலித்துள்ளார். அதோடு தனது சிட்பண்ட் நிறுவனம் மற்றும் கற்றல் ஆப்-பிலும் முதலீடு செய்யும்படியும் கேட்டுள்ளார். அரசுப் பள்ளி மாணவர்களுக்கு தனது ஆப் மூலம் இலவச கல்வி வழங்க இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.
அதை நம்பி தர்வாத் பகுதியை சேர்ந்த பசவராஜ் கோசல் என்பவரும் அவர் நண்பர்களும் 1.8 கோடியை முதலீடு செய்துள்ளனர். ஆனால், அந்தப் பணத்தை வீரேந்திர பாபு மோசடி செய்துவிட்டதாக, பெங்களூரு கொடிகேஹள்ளி காவல் நிலையத்தில் பசவராஜ் கோசல் புகார் கொடுத்துள்ளார்.
இதையடுத்து வழக்கு பதிவு செய்துள்ள போலீஸார், வீரேந்திர பாபுவை கைது செய்துள்ளனர். இந்த வழக்கில் தொடர்புடைய அவர் நண்பர்களை போலீஸார் தேடி வருகின்றனர். கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பும் விவசாயிகளிடம் பணம் வசூலித்து மோசடி செய்த வழக்கிலும் வீரேந்திர பாபு கைது செய்யப்பட்டிருந்தார்.