
தெலுங்கு திரையுலகின் முன்னணி நடிகர் மகேஷ்பாபுவின் தந்தை கிருஷ்ணாவின் திருவுருவச்சிலையை நடிகர் கமல்ஹாசன் திறந்து வைத்துள்ளார். இந்த விழா தொடர்பான புகைப்படங்களையும், வீடியோக்களையும் மகேஷ்பாபு தனது சமூகவலைதளப் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.
தெலுங்குத் திரையுலகின் பழம்பெரும் நடிகராக வலம் வந்தவரும், ‘சூப்பர் ஸ்டார்’ என ரசிகர்களால் கொண்டாடப்பட்டவரும், நடிகர் மகேஷ் பாபுவின் தந்தையுமான மறைந்த நடிகர் கிருஷ்ணாவின் திருவுருவச் சிலையை நடிகர் கமல்ஹாசன் விஜயவாடாவில் திறந்து வைத்துள்ளார்.
'இந்தியன் 2' படத்தின் படப்பிடிப்பிற்காக விஜயவாடா சென்றுள்ள கமல், மகேஷ் பாபுவின் அழைப்பை ஏற்று நடிகர் கிருஷ்ணாவின் சிலையை இன்று திறந்து வைத்துள்ளார். இதுதொடர்பான புகைப்படங்கள், வீடியோவை மகேஷ் பாபு வெளியிட்டுள்ளார்.
மேலும் இந்த நிகழ்ச்சியில், விஜயவாடா கிழக்கு தொகுதி ஒய்சிபி இன்சார்ஜ் தேவிநேனி அவினாஷ் கலந்து கொண்டார்.
’இந்தியன் 2’ படத்திற்காக தற்போது விஜயவாடா சென்றுள்ள கமல் சில நாட்கள் அங்கு தங்குகிறார். அதே நேரம் பிக் பாஸ் நிகழ்ச்சி ஷூட்டிங்கிற்காக ஒரு நாள் மீண்டும் சென்னை திரும்பும் கமல், அதன் பின்னர் தொடர்ந்து ஹைதராபாத்தில் நடக்கும் படப்பிடிப்பில் கலந்து கொள்கிறார்.
சமீபத்தில், இப்படத்தின் படப்பிடிப்பு வெளிநாட்டில் படமாக்கப்பட்ட நிலையில், விஜயவாடாவில் சுமார் 8000 பேருடன் எடுக்கக் கூடிய பிரம்மாண்ட காட்சியைப் படமாக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.