நடிகர் ஜெயராம் தான் தன்னை நிஜ வாழ்க்கையிலும் அன்புடன் வழிநடத்தும் குருசாமி என்று ஜெயம் ரவி கூறியுள்ளார். அவர்கள் இருவரும் சபரிமலையில் தரிசனம் செய்த புகைப்படங்களை தனது ட்விட்டர் பக்கத்திலும் பதிவிட்டுள்ளார்.
மணிரத்னம் இயக்கத்தில் பிரம்மாண்டமாக உருவாகியுள்ள 'பொன்னியின் செல்வன்' திரைப்படம் செப். 30-ம் தேதி வெளியாகிறது. இதனை முன்னிட்டு ரசிகர்களை சந்திக்கும் வகையில், 'பொன்னியின் செல்வன்' படக்குழுவினர் டூர் அடித்து வருகின்றனர். அதன்படி, இரு தினங்களுக்கு முன்னர் கொச்சி சென்ற படக்குழு, அங்கு ரசிகர்களுடன் கலந்துரையாடினர். இதில், விக்ரம், ஜெயம் ரவி, கார்த்தி, த்ரிஷா, ஜெயராம் ஆகியோர் கலந்துகொண்டனர்.
இப்படத்தின் ப்ரோமோஷன் நிகழ்ச்சிக்காக கொச்சி சென்றிருந்த ஜெயம் ரவி, அங்கிருந்து சபரிமலை சென்று சாமி தரிசனம் செய்துள்ளார். அவருடன் நடிகர் ஜெயராமும் சென்றிருந்தார். இருவரும் சாமி தரிசனம் செய்த புகைப்படங்களை நடிகர் ஜெயம் ரவி தனது ட்விட்டர் பக்கத்தில் ஷேர் செய்துள்ளார். இதை அவரது ரசிகர்கள் ட்ரெண்ட் செய்து வருகின்றனர்.
இந்த புகைப்படங்களுக்கு ஜெயம் ரவி வெளியிட்டுள்ள கேப்ஷனில், " பொன்னியின் செல்வனில் ஆழ்வார்க்கடியான் நம்பியைப் போல நிஜ வாழ்க்கையிலும் என்னை அன்புடன் வழிநடத்தும் எனது குருசாமி ஜெயராமுடன் பம்பையில் " எனக் குறிப்பிட்டுள்ளார்.
'பொன்னியின் செல்வன்' படத்தில் இடம் பெற்ற 'பொன்னி நதி' பாடல், கடந்த மாதம் சென்னையில் வெளியிடப்பட்டது. இந்நிகழ்ச்சியில், கார்த்தி, ஜெயம் ரவி, ஜெயராம் கலந்துகொண்டனர். அப்போது ஜெயம் ரவி பேசுகையில், "ஜெயராம் சாருடன் எனக்கு பல வருடங்களாக நெருங்கிய நட்பு உள்ளது. அது நட்பு என்பதை கடந்து அவர் தான் எனக்கு குருசாமியாக இருந்துள்ளார். ரியல் லைஃபில் ஜெயராம் சார் எனக்கு நிறையவே வழிகாட்டியுள்ளார். அவருடன் பொன்னியின் செல்வனில் ஒன்றாக நடித்தது எனக்கு மகிழ்ச்சி" என்று குறிப்பிட்டிருந்தார். இந்நிலையில், தற்போது இருவரும் ஒன்றாக சபரிமலையில் சாமி தரிசனம் செய்துள்ள புகைப்படங்கள் வைரலாகி வருகின்றன.
இப்படத்தில் நடிகர் ஜெயராம் ஆழ்வார்க்கடியான் கேரக்டரிலும், ஜெயம் ரவி அருண்மொழி வர்மன் என்ற கேரக்டரிலும் நடித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.