
ஒரே ஒரு வெற்றியால் நடிகர் ஒருவரின் சம்பளம் ஐம்பது மடங்கு அதிகரித்துள்ளது ஆச்சரியத்தை ஏற்படுத்தி இருக்கிறது.
கமல்ஹாசன் ’விஸ்வரூபம்’ படத்தில் சலீம் என்ற கேரக்டரில் நடித்திருப்பவர், இந்தி நடிகர் ஜெய்தீப் அலாவத் (Jaideep Ahlawat). இந்தியில் பல படங்களில் நடித்துள்ள இவருக்கு குறைவான சம்பளமே வழங்கப்பட்டு வந்தது. இந்நிலையில், அமேசானில் வெளியான ’பாதல் லோக்’( Paatal Lok) என்ற வெப் தொடரில் அவர் நடித்திருந்தார்.
இந்த தொடருக்காக அவருக்கு வழங்கப்பட்ட சம்பளம் ரூ.40 லட்சம். இந்த தொடர் ஹிட்டானது. அதில் இவர் நடித்த ஹதிராம் சவுத்ரி என்ற போலீஸ் கேரக்டர்தான் மொத்த தொடரையும் தூக்கி நிறுத்தியது. இந்த தொடரின் வெற்றிக்கு இவரின் நடிப்பும் ஒரு காரணம்.
இப்போது இந்த தொடரின் அடுத்த பாகத்தை அமேசான் எடுத்து வருகிறது. அதே போலீஸ் கேரக்டரில் ஜெய்தீப் நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். இப்போது அவருக்கு சம்பளமாக ரூ.20 கோடி கொடுக்கப்பட்டுள்ளது.
’’திறமையை நம் துறை அங்கீகரிக்கும் என்பதற்கு இது ஓர் உதாரணம். ஒரே ஒரு வெற்றி ஜெய்தீப்பின் வாழ்வை மாற்றியிருக்கிறது. ஒரு தொடர் ஹிட்டானதும் அடுத்தப் பாகத்துக்கு சம்பளத்தை அதிகரிப்பது வழக்கம்தான். ஆனால், இவ்வளவு பெரிய தொகையை நடிகர் ஜெய்தீப்பே எதிர்பார்த்திருக்கமாட்டார்’’ என்கிறார்கள் .