'தாரக் மேத்தா கா ஊல்தா சாஷ்மா' புகழ் குருசரண் சிங் ஏப்ரல் 22-ம் தேதி முதல் காணவில்லை. அவரது தந்தை அளித்த புகாரின் அடிப்படையில் டெல்லி போலீஸார் கடத்தல் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
பிரபல தொலைக்காட்சி நிகழ்ச்சியான 'தாரக் மேத்தா கா ஊல்தா சாஷ்மா'வில் ரோஷன் சிங் சோதியாக நடித்து பிரபலமடைந்தவர் குருசரண் சிங். இவரைக் கடந்த ஏப்ரல் 22-ம் தேதி முதல் காணவில்லை. இது தொடர்பாக குருசரண் சிங்கின் தந்தை ஹர்கித் சிங் டெல்லியில் உள்ள பாலம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இது தொடர்பாக டெல்லி போலீஸார் கடத்தல் வழக்குப் பதிவு செய்து விசாரணையைத் தொடங்கியுள்ளனர்.
50 வயதான குருசரண் சிங் கடந்த ஏப்ரல் 22-ம் தேதி காலை 8.30 மணிக்கு டெல்லி இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையத்தில் இருந்து மும்பைக்கு புறப்பட இருந்தார். ஆனால், அவர் மும்பைக்கு செல்லவில்லை என்று போலீஸார் தங்கள் ஆரம்பகட்ட விசாரணையில் தெரிவித்துள்ளனர்.
அவரது மொபைல் ஏப்ரல் 24-ம் தேதி வரை செயலில் இருந்தது. இதுகுறித்து வட இந்திய ஊடகங்களிடம் பேசிய அவரது தந்தை ஹர்கித் சிங், மகனைத் தேடும் விஷயத்தில் காவல்துறை அதிகாரிகள் தனக்கு ஒத்துழைப்பு தருவதாகவும் தேவையான ஆவணங்களை சேகரித்து, இதுகுறித்து விரைவான விசாரணை நடத்தப்படும் என்று அவர்கள் தங்களுக்கு உறுதியளித்ததாகவும் தெரிவித்தார்.
இது தொடர்பாக தனிப்படைகள் அமைக்கப்பட்டு விசாரணை தொடங்கப்பட்டுள்ளதாக போலீஸ் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. என்ன நடந்தது என்பதை அறிய சிசிடிவி காட்சிகளையும் ஸ்கேன் செய்துவருவதாக போலீஸார் தெரிவித்துள்ளனர்.
குருசரண் சிங் காணாமல் போனது அவரது ரசிகர்கள் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் வாசிக்கலாமே...
தீவிரவாதிகள் தாக்குதலில் 2 சிஆர்பிஎஃப் வீரர்கள் மரணம்; 6 பேர் படுகாயம்
மார்க் நெக்ஸ்ட்... ஸ்கில்ஸ் ஃபர்ஸ்ட்... பள்ளி மாணவர்களுக்கான டிப்ஸ்!
பீகாரில் இருந்து உ.பி.,க்கு 95 குழந்தைகள் கடத்தல்? - அதிரடியாக மீட்ட குழந்தைகள் நல ஆணையம்!
பாலஸ்தீனத்துக்கு ஆதரவாக போராட்டம்... அமெரிக்காவில் கோவை மாணவி கைது!