
நடிகை பாலியல் வன்கொடுமை வழக்கில் நடிகர் திலீப்பின் நண்பர் சரத்நாயர் திடீரென கைது செய்யப்பட்டுள்ளார்.
தமிழ், தெலுங்கு, மலையாளப்படங்களில் நடித்த பிரபல நடிகையை 2017 பிப்ரவரி 17-ம் தேதி சிலர் காரில் கடத்தி சென்று பாலியல் வன்கொடுமை செய்ததாக புகார் எழுந்தது. இவ்வழக்கு தொடர்பாக 10 பேர் மீது குற்றம் சாட்டப்பட்டது. இவ்வழக்கில் மலையாள திரையுலகின் பிரபல நடிகர் திலீப் கைது செய்யப்பட்டு ஜாமீனில் விடுவிக்கப்பட்டார்.
இந்நிலையில், திலீப்பின் நண்பரும், ஹோட்டல் உரிமையாளருமான சரத்நாயரை கேரள குற்றப்பிரிவு போலீஸார் நேற்று கைது செய்தனர். திரைப்பட இயக்குநர் பாலச்சந்திரகுமார் அளித்த வாக்குமூலத்தின் அடிப்படையில், இவ்வழக்கில் ஜாமீன் பெற்ற திலீப் வீட்டுக்குச் சென்றதாகக் கூறப்படும் நபர் சரத் நாயர் என்று விசாரணைக் குழு சந்தேகம் தெரிவித்துள்ளது. மேலும் இவ்வழக்கு தொடர்பான ஆதாரங்களை அழித்ததற்காக சரத் நாயர் கைது செய்யப்பட்டதாக போலீஸார் தெரிவித்துள்ளனர்.