’நானே வருவேன்’ படத்தின் ஷூட்டிங் முடிவடைந்ததை அடுத்து, `வாத்தி' படப்பிடிப்பில் நடிகர் தனுஷ் இணைந்துள்ளார்.
செல்வராகவன் இயக்கத்தில் தனுஷ் நடிக்கும் படம், `நானே வருவேன்'. இந்தப் படத்தை கலைப்புலி எஸ்.தாணு தயாரிக்கிறார். தனுஷ் இரண்டு வேடங்களில் நடிக்கும் இந்தப் படத்தில் ஸ்வீடன் நடிகை எல்லி அவ்ரம் ஜோடியாக நடிக்கிறார். இந்தப் படத்தின் ஷூட்டிங் சமீபத்தில் முடிவடைந்துவிட்டதாக நடிகர் தனுஷ் தெரிவித்திருந்தார்.
இதையடுத்து தெலுங்கு, தமிழில் உருவாகும் ’வாத்தி’ படப்பிடிப்பில் அவர் இணைந்துள்ளார். வெங்கி அட்லுரி இயக்கும் இந்தப் படத்துக்கு தெலுங்கில் ’சார்’ என்று டைட்டில் வைத்துள்ளனர். இதில் கல்லூரி ஆசிரியராக தனுஷ் நடிக்கிறார். சம்யுக்தா மேனன், ஸ்ரேயா சரண், சாய்குமார், தணிகலபரணி உட்பட பலர் நடிக்கின்றனர்.
பீரியட் படமான இதன் கதை, கல்வியை தனியார் மயமாக்குவதை எதிர்க்கும் ஓர் இளைஞனின் போராட்டத்தை மையப்படுத்தியதாகக் கூறப்படுகிறது. ஜி.வி.பிரகாஷ்குமார் இந்தப் படத்துக்கு இசை அமைக்கிறார். சித்தாரா என்டர்டெயின்மென்ட்ஸ், ஃபார்சூன் ஃபோர் சினிமாஸ் நிறுவனங்கள் தயாரிக்கின்றன. இந்தப் படத்தின் ஷூட்டிங் ஹைதராபாத்தில் நடந்து வருகிறது.