கரோனாவால் பாதிக்கப்பட்ட நடிகர் சிரஞ்சீவி, அதில் இருந்து மீண்டு, மீண்டும் படப்பிடிப்பில் கலந்துகொண்டார்.
தெலுங்கு சினிமாவின் மெகா ஸ்டாரான சிரஞ்சீவி, கடந்த சில நாட்களுக்கு முன் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டார். ’முன்னெச்சரிக்கையாக இருந்தும் கரோனா தொற்று உறுதியாகியுள்ளது. இதனால் வீட்டில் தனிமைப்படுத்திக் கொண்டுள்ளேன். என்னுடன் தொடர்பில் இருந்தவர்கள், கரோனா பரிசோதனை செய்துகொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறேன்’ என்று அவர் கூறியிருந்தார். அவர் விரைவில் நலம் பெற , திரை உலகினரும் ரசிகர்களும் வாழ்த்து தெரிவித்துனர்.
இந்நிலையில் அவர் கரோனா தொற்றில் இருந்து குணமடைந்துள்ளார். அவருக்கு இப்போது நடத்தப்பட்ட பரிசோதனையில் நெகட்டிவ் என்று வந்ததை அடுத்து, படப்பிடிப்பில் கலந்துகொண்டார். இதை ட்விட்டரில் தெரிவித்துள்ள அவர், ’காட்ஃபாதர்’ படப்பிடிப்பில் கலந்துகொண்ட சில புகைப்படங்களையும் வெளியிட்டுள்ளார்.
நடிகர் சிரஞ்சீவி, இப்போது மலையாளத்தில் சூப்பர் ஹிட்டான ’லூசிஃபர்’ படத்தின் ரீமேக்கில் நடித்து வருகிறார். ’காட்ஃபாதர்’ என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ள இந்தப் படத்தை, மோகன் ராஜா இயக்குகிறார். நயன்தாரா உட்பட பலர் இதில் நடிக்கின்றனர்.
சிரஞ்சீவி நடித்துள்ள ’ஆச்சார்யா’ படம், ஏப்ரல் 29-ம் தேதி வெளியாக இருக்கிறது. கொரட்டலா சிவா இயக்கியுள்ள இந்தப் படத்தில், ராம் சரண், காஜல் அகர்வால், பூஜா ஹெக்டே ஆகியோர் முக்கிய வேடத்தில் நடித்துள்ளனர்.