நடிகர் அசோக் செல்வன் நடிகை கீர்த்தி பாண்டியன் ஆகியோரது திருமணம் இருவீட்டார் சம்மதத்துடன் இன்று திருநெல்வேலியில் நடைபெற்றது.
நடிகரும் தயாரிப்பாளருமான அருண் பாண்டியனின் மூன்றாவது மகள் கீர்த்தி பாண்டியன். இவர் நடிகையாகவும் உள்ளார். இந்நிலையில், நடிகை கீர்த்தி பாண்டியன் நடிகரான அசோக் செல்வனை காதலித்து வருவதாகவும் விரைவில் திருமணம் செய்ய இருப்பதாகவும் கடந்த ஒரு வருட காலமாகவே தகவல்கள் பரவி வந்தன.
நடிகர் அசோக் செல்வன் சமீபத்தில் நடித்திருந்த ‘போர்த் தொழில்’ படம் பெரிய அளவில் வரவேற்பைப் பெற்றது. ’ப்ளூ ஸ்டார்’ படத்தில் இருவரும் இணைந்து நடித்த போது அவர்கள் இருவருக்குள்ளும் காதல் உருவானதாகக் கூறப்பட்டது.
இரு வீட்டார் பேச்சுவார்த்தை நடத்திய நிலையில், அதிகாரப்பூர்வமாக திருமண தேதி அறிவிக்கப்பட்டது. அதன்படி திருநேல்வேலி மாவட்டம் இட்டேரியில் உள்ள சேது அம்மாள் பண்ணை இல்லத்தில் இன்று காலை 6 -7 மணியளவில் இருவீட்டார் முன்னிலையில் திருமணம் கோலாகலமாக நடைபெற்று முடிந்தது.
திரையுலக பிரபலங்கள் பலர் கலந்துக் கொண்டு மணமக்களை வாழ்த்தினர். திருமணம் முடிந்தவுடன் அனைவருக்கும் மாம்பழ சர்க்கரை பொங்கல், இளநீர் புட்டிங், மரவள்ளிக்கிழங்கு வடை, நீர் தோசை என வாழ்த்த வந்திருந்த விருந்தினர்களுக்கு பசுமை விருந்து சுட சுட காலை உணவாக பரிமாறப்பட்டது.