மீனவர்களைக் கூலிப்படையினராகச் சித்தரிக்கும் 'யானை': தடைகோரிய வழக்கு ஒத்திவைப்பு

மீனவர்களைக் கூலிப்படையினராகச் சித்தரிக்கும் 'யானை':  தடைகோரிய வழக்கு ஒத்திவைப்பு

மீனவ சமுதாயத்தை அவமதிக்கும் வகையில் 'யானை' திரைப்படம் எடுக்கப்பட்டுள்ளதாகவும், அதனால் அதன் தணிக்கைச் சான்றிதழை ரத்து செய்ய வேண்டும் என்றும் கோரிய வழக்கு ஆகஸ்ட் மாதத்திற்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

சென்னை வில்லிவாக்கத்தை சேர்ந்த தமிழ்நாடு மீனவர் கூட்டமைப்பின் செயற்குழு உறுப்பினர் ஜோபாய் கோமஸ், சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். அந்த மனுவில், " நடிகர் அருண் விஜய் நடிப்பில் இயக்குனர் ஹரி இயக்கத்தில் சமீபத்தில் வெளியான 'யானை' திரைப்படம், ராமநாதபுரம், தங்கச்சிமடம், பாம்பன் பகுதி மீனவ சமுதாயத்தைச் சேர்ந்தவர்களைச் சமூக விரோதிகளாக காட்டியுள்ளனர். மேலும் மீனவர்களைக் கூலிப்படையினராகவும், குழந்தைகளைத் தவறாக பயன்படுத்துபவர்களாகவும் சித்தரிக்கப்பட்டுள்ளது.

மேலும் சில காட்சிகள் மத உணர்வை புண்படுத்தும் வகையில் உள்ளது. கச்சத்தீவு பிரச்சினையும் இந்த படத்தில் கையாளப்பட்டுள்ள விதம் எங்கள் உணர்வுகளைப் புண்படுத்தும் வகையில் உள்ளது.

உயிரைப் பணயம் வைத்து நடுக்கடலில் மீன் பிடித்து, ஆண்டுக்கு 10 ஆயிரம் கோடி ரூபாய் அன்னிய செலாவணி ஈட்டித்தரும் விளிம்புநிலை மக்களான மீனவர்களை அவமதிக்கும் வகையில் உள்ள காட்சிகளுடன் படத்தை தொடர்ந்து திரையிட தடை விதிக்க வேண்டும். படத்துக்கு வழங்கப்பட்ட தணிக்கை சான்றிதழை ரத்து செய்ய வேண்டும்" என அவரது மனுவில் கேட்டுக் கொண்டுள்ளார்.

இந்த மனு தலைமை நீதிபதி முனீஷ்வர்நாத் பண்டாரி மற்றும் நீதிபதி மாலா அமர்வில் இன்று விசாரணைக்கு வந்தது. மனுதாரர் தரப்பு வழக்கறிஞர் காணொலி காட்சி மூலம் ஆஜராவதில் இடையூறு ஏற்பட்டதால், வழக்கின் விசாரணையை ஆகஸ்ட் 1-ம் தேதிக்கு தள்ளிவைக்கப்பட்டது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in