’நான் ஆணையிட்டால் அது நடந்துவிட்டால்’ என்று முழங்கிய ‘எங்க வீட்டு பிள்ளை!’

’நான் ஆணையிட்டால் அது நடந்துவிட்டால்’ என்று முழங்கிய ‘எங்க வீட்டு பிள்ளை!’

’நான் உங்கள் வீட்டுப் பிள்ளை, இது ஊர் அறிந்த உண்மை, நான் செல்லுகின்ற பாதை, பேரறிஞர் காட்டும் பாதை’ என்று 1968-ம் ஆண்டு ‘புதிய பூமி’ படத்தில் எம்ஜிஆர் ஆடிப்பாடினார். ’’இதிலென்ன சந்தேகம். நீங்கள் எங்கள் வீட்டுப்பிள்ளை’தான்’’ என்பதை எம்ஜிஆரின் சினிமா வெற்றியும் அரசியல் வெற்றியும் அரியணையில் அமர்ந்து மரணிக்கும் வரை ஆட்சி செய்த பலமும் உணர்த்தின.

எம்ஜிஆரை, தங்கள் வீட்டு ரேஷன்கார்டில்தான் மக்கள் சேர்க்கவில்லை. அந்தளவுக்கு மனதில் தம் வீட்டின் பிள்ளையாகத்தான் நினைத்தார்கள். ‘புதிய பூமி’க்கு முன்னதாகவே ‘எங்க வீட்டு பிள்ளை’யைக் கொடுத்த எம்ஜிஆருக்கு இப்படியொரு சந்தேகம் வரலாமா என்பதுதான் அன்றைக்கு மக்களின் ஆதங்கமாக இருந்தது. ஆமாம்... ‘எங்க வீட்டு பிள்ளை’யைப் பார்க்கலாமா?

தமிழ், தெலுங்கு, இந்தி என கொடிகட்டிப் பறந்த நிறுவனங்களில் விஜயா வாஹினி ஸ்டூடியோவும் ஒன்று. நாகிரெட்டி திரையுலகின் ஜாம்பவான்களில் ஒருவர். தெலுங்குத் திரையுலகில், என்.டி.ராமராவை கிருஷ்ணராகவே பார்த்து வணங்கி ஆராதித்தவர்கள் அந்த மாநில மக்கள். அதற்கு மிகப்பெரிய மார்க்கெட் வேல்யூவை உருவாக்க வேண்டியிருந்தது. அந்த சமயத்தில் நல்ல நல்ல படங்களாக வந்து என்டிஆருக்கு கைகொடுத்தன. ‘ராமுடு பீமுடு’ என்கிற படம் ஆந்திரத்தின் மூலைமுடுக்கு கிராமங்கள் வரை என்டிஆரை. கொண்டு சேர்த்தது. அவரின் கொழுகொழு கன்னத்தையும் வெள்ளந்திச் சிரிப்பையும் பார்ப்பதற்காகவே, மீண்டும் மீண்டும் படம்பார்த்தார்கள் மக்கள். நாகிரெட்டியாருக்கும் நான்கைந்து மடங்கு லாபம் கொட்டியது. அதனால், இந்தப் படத்தை தமிழிலும் எடுக்கலாம் என முடிவு செய்தார்.

அப்போதெல்லாம் பெரும்பாலும் தெலுங்குப் படங்கள், தமிழில் ரீமேக் செய்கிற வழக்கம் அதிகமாகவே இருந்தது. சென்னையில் வாஹினி ஸ்டூடியோவை இயக்கிய நாகிரெட்டி, தமிழில் ஒரு சூப்பர் ஹிட் படத்தை ரீமேக் செய்யாமல் எப்படி இருப்பார்? சினிமாத்துறையிலும் அரசியல் களத்திலும் என்டிஆருக்கும் எம்ஜிஆருக்கும் ஏகப்பட்ட பொருத்தங்கள் உண்டு. அந்தப் பொருத்தங்களில் ஒன்றாக நாகிரெட்டியார் யோசித்தார். ‘ராமுடுபீமுடு’வை எம்ஜிஆரைக் கொண்டு தமிழ்ப்படமாக உருவாக்கினார். அதுதான் ‘எங்க வீட்டு பிள்ளை’.

பொங்கலன்று ரிலீஸான இந்தப் படம், எம்ஜிஆர் ரசிகர்களுக்குத் தீபாவளிக் கொண்டாட்டமாகவே அமைந்தது. ‘ராமுடுபீமுடு’ என்ற தெலுங்குப் படத்தை, தமிழில் எடுக்க முடிவு செய்த விஜயா புரொடக்‌ஷன்ஸ், எந்த டிஸ்கஷனும் இல்லாமல் இவர்தான் ஹீரோ என்று எம்ஜிஆரை டிக் அடித்தது. படத்தையும் அதன் அதிரிபுதிரி வெற்றியையும் அறிந்துவைத்திருந்த எம்ஜிஆர், டபுள் ஓகே சொன்னார். நாயகியாக சரோஜாதேவி நடித்தால்தான் பொருத்தமாக இருக்கும் என்று முடிவு செய்த நாகிரெட்டியார், விடிந்ததும் விடியாததுமாக, சரோஜாதேவி வீட்டுக்குச் சென்று, பேசி சம்மதம் வாங்கி நடிக்கவைத்தார்.

படம் குறித்த அறிவிப்பு வந்ததுமே எம்ஜிஆர் ரசிகர்களுக்கு கொண்டாட்டம். வானத்துக்கும் பூமிக்கும் எகிறிக்குதித்தார்கள். இரட்டை வேடங்களில் ‘நாடோடி மன்னன்’ படத்தில் நடித்ததற்குப் பிறகு, ஏழு வருடங்கள் கழித்து, அடுத்த இரட்டை வேடப் படமாக ‘எங்க வீட்டு பிள்ளை’ என்றால்... இரண்டு எம்ஜிஆர் என்றால் இரட்டிப்பு குதூகலத்துக்குச் சொல்லவா வேண்டும்?

விஜயா கம்பைன்ஸ் புரொடக்‌ஷன்ஸ் நாகிரெட்டி - சக்ரபாணி தயாரித்த ஈஸ்ட்மென் கலர் படம் இது. மிகப் பிரம்மாண்டமான முறையில் எடுத்திருந்தார்கள். வீடுகள் செட்டெல்லாம் அவ்வளவு கலைநயத்துடன் உருவாக்கப்பட்டிருந்தன.

‘டபுள் ஆக்ட் படம்தானே...’, ‘ ஆள் மாறாட்டக் கதைதானே...’ என்று ஒற்றைவரியில் சர்வசாதாரணமாக சொல்லிவிடமுடியாதபடி நரஸராஜூவின் மூலக்கதை அமைந்திருந்தது. அதை இன்னும் அற்புதமாக திரைக்கதையாக்கி ஜாலமும் ஹாஸ்யமும் சேர்த்துக் கொடுத்தார்கள் தமிழில்.

இன்னும் சொல்லப்போனால், எம்ஜிஆருக்கே இது புதுமாதிரியான படம்தான். காரணம்... அப்பாவி எம்ஜிஆர், தமிழ் சினிமாவுக்கும் புதுசு. ரசிகர்களுக்கும் விருந்து. அந்த அப்பாவி முகம் கொண்ட எம்ஜிஆரைப் பார்த்துக்கொண்டே இருக்கலாம். அவ்வளவு பாந்தமாக இருப்பார் எம்ஜிஆர்!

அத்தனை சொத்துகளுக்கும் அதிபதி அப்பாவி எம்ஜிஆர். ஆனால், மாமா நம்பியாரின் பிடியில் சொத்துகள் இருக்கும். எம்ஜிஆரும் இருப்பார். மிரட்டலான பேச்சு, உருட்டலான பார்வை, விளாசித்தள்ளும் சாட்டை என எம்ஜிஆரை பம்பரமாக்கி அதகளம் பண்ணியிருப்பார் நம்பியார்.

இந்த எம்ஜிஆர், ‘ஐயோ பாவம்’ என்றிருக்கும் அப்பாவி. இன்னொரு எம்ஜிஆர், நாகேஷுடன் சுதந்திரமாகச் சுற்றித் திரிந்துகொண்டு, நடிக்க முயற்சி செய்துகொண்டு, ஜாலியாகப் பொழுதைக் கழிப்பார். அப்பாவி எம்ஜிஆர் ராமு. அட்டகாசம் பண்ணும் எம்ஜிஆர் இளங்கோ!

அப்பாவியும் பயமுமாக இருக்கும் ராமு எம்ஜிஆருக்கு ஒருகட்டத்தில் செத்துவிடலாம் என்று தோன்றும். சாவதற்கு முயற்சி செய்வார். அக்காவின் மகளான சிறுமி தடுத்துவிடுவாள். ’’அடியும் உதையும் வாங்கிக்கொண்டு இங்கே இருக்கமுடியாது’’ என்று வீட்டை விட்டே கிளம்பிவிடுவார் ராமு.

இதற்கிடையே செல்வந்தரான எஸ்.வி.ரங்காராவின் மகள் சரோஜாதேவியை அப்பாவி ராமுவுக்கு மணமுடித்து, வரதட்சணைப் பணமும் பெற்றுவிடத் திட்டம் போட்டிருப்பார் நம்பியார்.

ஒருவழியாக, ராமு எம்ஜிஆர், இளங்கோ எம்ஜிஆரின் கிராமத்துக்குச் சென்று அவரின் வீட்டில் அடைக்கலமாவார். இங்கே இளங்கோ எம்ஜிஆர், சரோஜாதேவியின் கண்ணில் பட்டு, வீட்டுக்கு அழைத்துச் செல்ல, அங்கே நம்பியார் வந்து, அவரை அழைத்துச் செல்வார். அப்புறமென்ன? என்பதுதான் படத்தின் ஆகச்சிறந்த சுவாரஸ்யங்கள். தெலுங்கில் இயக்கிய சாணக்யாவே, இங்கேயும் இயக்கினார்.

கிராமத்தில் இளங்கோ எம்ஜிஆரின் முறைப்பெண் ரத்னா. ராமு எம்ஜிஆருக்குப் பார்த்த சரோஜாதேவி. இப்படி ஆள்மாறாட்டக் கதையில், காதலும் இடம் மாறும். அந்தக் காதலால் குழப்பமும் பிரிவும் சோகமும் வரும். ஆனால், படம் முழுக்க இவையெல்லாம் இருந்தாலும் சோகத்தை சட்சட்டென்று நல்ல மூடுக்குக் கொண்டு வந்துவிடுகிற திரைக்கதையைக் கையாண்டதுதான் படத்தின் மிகப்பெரிய பலம்!

தைரிய எம்ஜிஆர், ஹோட்டலுக்குச் சென்று இட்லி, தோசை, ஊத்தப்பம் என்று ஃபுல்கட்டு கட்டிவிட்டு, பில் தராமல் வெளியேறிவிடுவார். அதேநேரம், அதே டேபிளுக்கு அப்பாவி எம்ஜிஆர் வந்து உட்காருவார். சர்வர், ’’வேறென்ன வேணும்’’ என எரிச்சலாகக் கேட்பார். ’’ரெண்டு இட்லி’’ என்பார் எம்ஜிஆர் பயந்துகொண்டே! ‘’மறுபடியும் முதல்லேருந்தா?’’ என்பார் சர்வர். இந்த மறுபடியும் முதல்லேருந்தா... வசனம் எங்கிருந்து எடுக்கப்பட்டிருக்கிறது கவனித்தீர்களா?

சரோஜாதேவி ஒரு பக்கம் வர, இன்னொரு பக்கத்தில் ரெண்டு எம்ஜிஆரும் இருப்பார்கள். சரோஜாதேவியின் ஹேண்ட்பேக்கை ஒருவன் தூக்கிக்கொண்டு ஓட, திருடன் திருடன் என்று கத்துவார் சரோஜாதேவி. உடனே வீரமான எம்ஜிஆர், திருடனை நோக்கி ஓடுவார். இது வழக்கமான சீன். ஆனால், திருடன் என்றதும் அப்பாவி எம்ஜிஆர் தன் பர்ஸை பத்திரப்படுத்திக்கொண்டு, அங்கிருந்து ஓடுவார். சின்னக்காட்சிதான். ஆனாலும் அத்தனை நகாசு காட்டியிருப்பார்கள் இந்த இடத்தில்!

இப்படி படம் நெடுக, அங்கங்கே காட்சிகளாலும் வசனங்களாலும் நம்மை ரொம்பவே ஈர்த்திருப்பார்கள். வீரபாண்டிய கட்டபொம்மன் படத்துக்கு வசனம் எழுதிய சக்தி கிருஷ்ணசாமியின் வசனங்கள் ஒவ்வொன்றுமே நுட்பமாக இருக்கும். அதிலும் நாகேஷ் உளறுவாயனாக அடிக்கும் லூட்டிக்கு அளவே இல்லை.

”என்னண்ணே... அவங்களைக் கடிச்சிட்டே... ச்சீ... அடிச்சிட்டே”, “தப்பு பண்ணிட்டோம். நீங்கதான் துரத்தணும்... சாரி திருத்தணும்”, “அண்ணே, அவங்க காலை ஒடி சீச்சீ காலைப் புடி”, “டைரக்டர் சார், எனக்கொரு டான்ஸ் கொடுங்க சார். மன்னிக்கணும் சான்ஸ் கொடுங்க சார்” என்று படம் முழுவதும் இப்படித்தான் பேசி நம்மை குலுங்கக்குலுங்கச் சிரிக்கவைத்திருப்பார் நாகேஷ்.

சரோஜாதேவியை இன்னும் அழகாகவும் எம்ஜிஆரை அதைவிட அழகாகவும் மொத்தப் படத்தை அழகுக்கு அழகாகவும் வின்சென்ட் - சுந்தரத்தின் ஒளிப்பதிவு மெருகேற்றிக்கொண்டே இருக்கும். விஸ்வநாதன் ராமமூர்த்தியின் மெட்டுகள் ஒவ்வொன்றும் நம் மனதை அள்ளிக்கொண்டு போகும். பாடலின் உள்ளூடாக வருகிற இசைகள் எல்லாமே நம் கவனம் ஈர்க்கும். காதுகளை வருடி மனதைத் தொடும்!

’கண்களும் காவடிச் சிந்தாகட்டும் / காளையர் நெஞ்சத்தைப் பந்தாடட்டும்’ பாட்டு ஸ்டேஜ் டான்ஸ். அதற்கேற்றாற்போல டியூன் போட்டிருப்பார். எல்.ஆர்.ஈஸ்வரியின் குரல், நம்மையும் ஆடவைத்துவிடும். ’குமரிப்பெண்ணின் உள்ளத்திலே/ குடியிருக்க நான் வரலாமா’ பாட்டு, இன்றைக்குக் கேட்டாலும் நம்மைக் காதலிக்கத் தூண்டும். ரசனையை உசுப்பும்!

’நான் மாந்தோப்பில் நின்றிருந்தேன்/ அவன் மாம்பழம் வேண்டும் என்றான்’ பாடல், கிராமத்துச் சங்கதிகளைச் சேர்த்துக் கட்டிய அந்தக் காலத்து குத்துப்பாட்டு. எம்ஜிஆரும் ரத்னாவும் பிரமாதம் பண்ணியிருப்பார்கள். ‘பெண் போனாள்... இந்தப் பெண் போனாள்/ இவள் பின்னாலே என் கண் போகும்’ என்ற டூயட் பாடலுக்கு டிரிபிள் பேங்கோஸில் பின்னிப்பெடலெடுத்திருப்பார் மெல்லிசை மன்னர்.

‘மலருக்குத் தென்றல் பகையானால் என்றொரு சோகப்பாடல். இங்கே சரோஜாதேவியும் அங்கே ரத்னாவுமாகப் பாடுவார்கள். பொதுவாக, பரபரவென போய்க்கொண்டிருக்கும் படத்துக்கு இப்படி சோகப்பாட்டு முட்டுக்கட்டை போடும் என்பார்கள். ஆனால், அப்படி எந்தச் சேதாரமும் நிகழாதபடி, பாடலை அமைத்திருப்பார்கள். கில்லாடித்தனமான எடிட்டிங் வேலைகள் சோர்வு ஏற்படுத்தாமல் கதையைத் தாங்கிப் பிடிக்கும்!

படத்திலும் எம்ஜிஆரின் திரையுலக மற்றும் அரசியலிலும் முக்கியப்பங்கு வகித்த ‘நான் ஆணையிட்டால்’ பாட்டுதான் படத்துக்கே ஹைலைட்! பாட்டு ஆரம்பிக்கும் முன்பிருந்தே ஆரம்பித்துவிடுகிற கைத்தட்டல், பாட்டு முடிந்தும் கூட ஓயாதிருப்பதுதான் எம்ஜிஆருக்கும் நம்பியாருக்கும் அந்தச் சவுக்குக்கும் கிடைத்த மெகா வெற்றி. முக்கியமாக, கவிஞர் வாலிக்கும் அவரின் வரிகளுக்குமான வெற்றி இது.

எஸ்.வி.ரங்காராவ், எந்தக் கேரக்டர் கொடுத்தாலும் விஸ்வரூபமெடுத்து நடிப்பில் பிரமிப்பூட்டுவார். இதில் காமெடியான அப்பா. இன்னும் கலக்கிவிடுவார். நம்பியார், தங்கவேலு, பண்டரிபாய் என பலரும் அருமையான நடிப்பை வெளிப்படுத்தியிருப்பார்கள்.

இந்த எம்ஜிஆரும் அந்த எம்ஜிஆரும் அண்ணன் தம்பி என்கிற முடிச்சு அவிழ்வதும் நம்பியாரை வெளுத்தெடுப்பதும் பண்டரிபாய் அக்கா என அறிந்து உருகுவதும் என கடைசி இருபது நிமிடங்கள் சூப்பர் ஃபாஸ்ட் எக்ஸ்பிரஸ் வேகத்தில் போய் சுபத்தில் முடியும். ஆனால், எம்ஜிஆரின் அடுத்தடுத்த இன்னிங்ஸ் அங்கிருந்துதான் ஆரம்பமானது. அங்கிருந்தும் ஆரம்பமானது என்று சொல்லலாம்! தமிழ்த் திரையுலகில், முதன்முதலாக, ஒரு படம் ஏழு தியேட்டர்களில் வெள்ளிவிழா கண்டது என்றால் அது ‘எங்க வீட்டு பிள்ளை’தான்! திருச்சி ஜூபிடர் தியேட்டரில் மட்டும் 236 நாட்கள் ஓடி சாதனை படைத்தது.

மனம், வலியோடு இருந்தால், வேதனையில் தவித்திருந்தால், துக்கத்தில் உழன்றிருந்தால், வருத்தத்தில் மூழ்கியிருந்தால், ’எங்க வீட்டு பிள்ளை’யைப் பாருங்கள். டல்லான மனசு எம்ஜிஆர் மாதிரியே சுறுசுறுவென ஆகிவிடும். ஏதோவொரு உற்சாகம் தொற்றிக்கொள்ளும். அதுதான் எம்ஜிஆர் ஃபார்முலா.

1965-ம் வருடம் பொங்கல் திருநாளுக்கு வந்தது ‘எங்க வீட்டு பிள்ளை’. படம் வெளியாகி, 57 வருடங்களாகின்றன. இன்னமும் ‘நான் ஆணையிட்டால்’ பாடல் நமக்கு தன்னம்பிக்கை பிறக்கச் செய்யும் பாடலாகவும் ‘குமரிப்பெண்ணின் உள்ளத்திலே’ பாடல், நம் நெஞ்சத்தைக் களவாடுகிற பாடலாகவும் இருக்கின்றன. எம்ஜிஆரின் மிக முக்கியமான படங்களில், ‘எங்க வீட்டு பிள்ளை’யும் இருக்கிறான். மக்களின் மனங்களில் ‘எங்க வீட்டு பிள்ளை’யும் ‘எங்க வீட்டு பிள்ளை’ படமும் என்றென்றைக்கும் நிலைத்திருக்கும்!

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in