புனிதக் காதல் பேசிய ‘குணா’!

காலம் கடந்து கொண்டாடப்படும் கமல் படம்
புனிதக் காதல் பேசிய ‘குணா’!

வெற்றிப் படங்கள் என்று வசூல் குவிக்கும் படங்களை மட்டுமே சொல்லிக்கொண்டிருக்கிறோம். நல்ல படங்களை, தரமான படங்களை, ஆழமான உணர்வுகளை மிகத் துல்லியமாக நமக்குக் கடத்துகிற படங்களை வெற்றிப் பட பட்டியலில் நாம் சேர்ப்பதே இல்லை. மக்களின் மனங்களில் எவையெல்லாம் நிறைந்திருக்கிறதோ... அவை வெற்றி பெற்றவையாகக் கருதுவதுதான் சரியாக இருக்கும். ஒன்றுமே இல்லாத படங்கள், ஹவுஸ்புல் காட்சிகளாக ஓடியதும் நடந்திருக்கிறது. ‘படம் நல்லாத்தானே இருக்கு. ஏன் ஓடல’ என்று தயாரிப்பாளர்களும் விநியோகஸ்தர்களும் ஏன்... ரசிகர்களும் கூட குழம்பிப் போனதும் நடந்திருக்கிறது. இப்படியான எல்லாக் கேள்விகளும் கொண்டு, இன்றைக்கும் மக்களின் மனதில் நிற்பவன்தான் ‘குணா!’

’கமல் படத்துக்கு எப்போதுமே ஒரு ராசி உண்டு’ என்பார்கள். அவரின் சில படங்கள், ரிலீஸாகும் போது, கொண்டாடப்படாமல் இருக்கும். கமலின் ரசிகர்களே கூட கைகழுவிவிடுவார்கள். பிறகு சில வருடங்கள் கழித்து, ‘ஆஹா ஓஹோ’ என்று எல்லோருமே கொண்டாடித் தீர்ப்பார்கள். சமீபத்தில் கூட ஒருவிழாவில், ‘’இப்போது ‘அன்பே சிவம்’ படத்தை நிறைய பேர் பார்த்து பாராட்டிக்கொண்டிருக்கிறார்கள்’’ என்று பேசினார் கமல்ஹாசன்.

ஆந்திரத்தின் அந்த மலையையொட்டிய இடுக்கு இடுக்கான குறுக்குச் சந்துகளில் உள்ள வீட்டின் மாடியில் இருந்து, ஒற்றைக்காலில் நின்றுகொண்டிருக்கும் கமலின் முதுகுக்குப் பின்னிருக்கும் கேமிராப் பார்வையில் இருந்து கதையும் படமும் தொடங்கும்.

மிக மோசமான தகப்பன். அதைவிட மோசமான தொழில் செய்யும் அம்மா. அந்தக் கட்டமைப்பில் இருந்து, கட்டவிழ்க்கப்பட்ட ஒழுக்க மீறல்களுக்குள்ளிருந்து வளருகிற பையனின் மனசு அவனுக்கு. அவனின் குழப்பங்களும் இதெல்லாம் தப்பு என்கிற நினைப்பும் அந்தத் தப்புக்கு கடவுளைச் சரணடைவதுதான் சரி என்கிற வேண்டுதலும் என பல கலவைக் கனவுகளுக்குள் சஞ்சரிக்கிறான் குணா!

’பாவச் சகதியில் சிக்கிக்கொண்டிருக்கிற நம்மை ஒரு தேவதை மீட்க வருவாள், அவள் பார்வதிதேவி’ என்று நம்பிக்கொண்டிருக்கிறான். ’அப்படி அபிராமியே வந்தால், நான்தான் சிவன்’ என்றும் அதீத சிந்தனைகளுக்குள் அமிழ்ந்து கிடக்கிறான் குணா. ஆனால் மனநலம் பாதிக்கப்பட்டவனாகவே எல்லோராலும் பார்க்கப்படுகிறான். ‘இங்கெல்லாம் ஒரே அசிங்கம்’ சமூகக் கோட்பாடுகளையும் அத்துமீறல்களையும் சொல்கிறான். ‘அபிராமி வருவா. வந்ததும் போயிருவேன்’ என்கிறான். ‘இது என் மூஞ்சி இல்ல’ என்று தன் சுயத்தைத் தேடிக்கொண்டிருக்கிறான்.

அந்தக் கதறலும் அவனுடைய சிந்தனைகளும் ஆசைகளும் நம்மையும் ஏதோவொரு விதத்தில் தாக்குகின்றன. குணாவின் சித்தப்பா, அவனுடைய பக்தியைக் கொண்டே ‘அம்பாள் கனவுல வந்து சொன்னா குணா’ என்று திருட்டு வேலைக்கு குணாவைப் பயன்படுத்திக் கொள்கிறார். வேறு சில பிரச்சினைகள் வரும்போது, அம்மாவே அவனைப் பயன்படுத்தித் தப்பிக்கிறாள்.

அப்படியொரு சமயத்தில், நாயகியைப் பார்க்கிறான். அதுவும் கோயிலில்! ‘ஒருநாள் வருவாடா’ என்று சித்தப்பா சொல்லிவைத்திருந்தார் முன்னமே. திரும்பிப் பார்த்தால் வாத்தியங்கள் முழங்க, கம்பீரமாகவும் ஒய்யாரமாகவும், அழகாகவும் ஒயிலாகவும், தெய்வாம்சத்துடன் ஒருத்தி வருகிறாள். தன்னை ரட்சிக்க வந்த தேவதையாக, தெய்வமாக, உமையவளாக, அபிராமியாகவே அவளைப் பார்க்கிறான் குணா.

கோயிலில் பணத்தையும், நகைகளையும் கொள்ளையடிக்கிறார்கள் சித்தப்பாவும் அவரின் ஆட்களும். அப்போது தப்பிக்கிற களேபரங்களுக்கு மத்தியில், நாயகியைத் தூக்கிக்கொண்டு வந்துவிடுகிறான் குணா. பிறகு, வீட்டிலும் சிக்கல், பிரச்சினைகள். அவளை அழைத்துக்கொண்டு, ஆந்திரத்திலிருந்து தமிழகத்தின் கொடைக்கானல் மலைப்பகுதிக்கு வந்துவிடுகிறான். அந்த மலையில் குணாவுக்கும் அபிராமி என அவன் நினைத்துக்கொண்டிருப்பவளுக்குமான உறவு என்னவானது, அவர்கள் கதி என்ன என்கிற ’அப்நார்மல்’ கதையைப் பிடித்து, அதற்குள் ’நார்மல்’ அன்பையும் உணர்வுகளையும் இயல்பாகக் கோர்த்துக் கொடுத்திருப்பதுதான் ‘குணா’ திரைப்படம்!

பெண்களை வைத்து ‘தொழில்’ நடத்தும் வரலக்ஷ்மி, அந்தக் கூட்டத்தில் உள்ள ’ரோஸி’ ரேகா, ’சித்தப்பா’ ஜனகராஜ், ஒப்புக்கு டாக்டராக காகா ராதாகிருஷ்ணன், மனநல மருத்துவர் கிரீஷ் கர்னாட், தமிழுக்கு புதுவில்லனாக சரத் சக்சேனா, அவருக்கு முதலாளியாக... பல கோடி சொத்துகளுக்கு அதிபதியாக நாயகி ரோஷிணி.

தொடர்பில்லாத பேச்சு, முட்டாள்தனமான சிரிப்பு, பொசுக்கென வந்துவிடுகிற கோபம், தாங்கமுடியாமல் பீறிடுகிற அழுகை, எப்போது, எதற்கு, ஏன் என்று தெரியாமலேயே வருகிற ஆவேசம் என எல்லா உணர்வுகளையும் புதுமாதிரியாக கொடுத்து, தன் நடிப்பால், ‘குணா’வை திரையில் அசுரத்தனத்துடன் உலவவிட்டிருப்பார் கமல்.

நாயகி ரோஷிணியின் கண்களை மறக்க முடியாது. அவருக்குக் குரல் கொடுத்த நடிகை சரிதாவையும் நினைக்காமல் இருக்க முடியாது. அந்தக் கேரக்டரின் குரலாகவே சரிதாவின் குரல் முகம் காட்டாமல் நடித்திருக்கும்.

’‘காத்தே வரல... இதுல சத்தம்தான் வரும்’’ என்று மின்விசிறியைக் காட்டி, ’’வரும்வரும்வரும்வரும்வரும்...’’ என்று கையை மின்விசிறி றெக்கைகள் போல் சுழற்றிக் கொண்டே பேசும் கமலை, அரவணைத்து அணைத்து ஆசுவாசப்படுத்துவார் ரேகா. கவிதை மாதிரியிருக்கும் காட்சி இது.

’’எரகட்டா டாக்டர் சொல்லிட்டாரு. எனக்கு பைத்தியமில்லைன்னு’’ என்று கைகுவிப்பார் கமல். கைகள் தெரியாது. ஜிப்பா மறைத்திருக்கும். ‘’சித்தப்பா ஜிப்பா. பெருசா இருக்கு’’ என்பார். அந்த நாடகம் சொதப்பலானதும் கமலை கன்னாபின்னாவெனத் திட்டுவார் அம்மா வரலக்ஷ்மி. ‘’ஒரு பேப்பரும் பேனாவும் கொடு. 500 கையெழுத்துப் போடுறேன்’’ என்பார் கமல். தியேட்டரே சிரித்து ரசித்துக் கைத்தட்டும். இவையெல்லாம் கமல் டச்.

படத்தின் பெரும் பலம் கமல். கமலுக்குப் பக்கபலம் எழுத்தாளர் பாலகுமாரன். படத்தின் வசனங்கள் அனைத்தையும் இன்றைக்கும் சிலாகித்துச் சொல்லுகிற ரசிகர்கள் ஏராளம். வசனங்கள் ஏகப்பட்ட பேருக்கு மனப்பாடம்!

கடத்தி வரும் வழியில், தண்ணீர் பிடிக்க குளக்கரையில் வண்டியை நிறுத்துவார் கமல். அதற்குள் காரை எடுத்துக் கிளம்புவார் ரோஷிணி. குறுக்கே வந்து நிற்பார் கமல். ‘’வழிவிடு, இல்லேன்னா ஏத்திடுவேன்’’ என்பார். “அதெப்படி’’ என்று ஆச்சரியமாகக் கேட்பார் கமல். விருட்டென்று கார் வந்து மோத,கர்ணகொடூரமாக கமல் விழுவார். பதற்றத்துடன் ரோஷிணி. பேய்த்தனமாகச் சிரித்தபடி, ‘’இதே வேற எவனாவது செஞ்சிருந்தா அவன் செத்துருப்பான். வேற யார்கிட்டயாவது செஞ்சிருந்தா அவனும் செத்திருப்பான். நான் நானா இருந்ததால சாகல; நீ நீயா இருந்ததால சாகல. விதி... எழுதிவைக்கப்பட்ட விதி. நமக்கு சாவு கிடையாது’’ என்பார் கமல். தியேட்டர் கரவொலியில் அதிர்ந்தது.

’’அந்த மலை ஃபுல்லா பென்டதால் வாசனைதான்’’ என்பார் கமல். ‘’டாக்டர் நாக்கு தடிச்சிருக்கா பாருங்க’’ என்று கேட்பார். ’குணா’ எனும் கதாபாத்திரத்துக்குள் இருக்கிற குழந்தைமையை நமக்கு உணர்த்தும்.

கொடைக்கானல் மலை. இடிந்த தேவாலயம். அதில்தான் கமலும் ரோஷிணியும் தங்குவார்கள். அங்கிருக்கும் குருவிகள் சத்தமிட்டு அலறும். ‘’பயப்படாதே. நாங்கதான். அதுவும் பயப்படுது, உன்ன மாதிரி’’ என்பார். கடைக்குக் கிளம்பும்போது, ’’குணா... ஜாக்கிரதை’’ என்பார் ரோஷிணி. அவளையும் அவளின் பின்னே உள்ள ஒளியையும் சேர்த்துப் பார்த்துப் பூரித்துப்போய்... ‘அபிராமி அபிராமி...’ எனப் புலம்புவார். அதையடுத்து, பின்னணியில் ’கல்யாணம்... கல்யாணம்’ எனும் சந்திரபாபுவின் பாட்டு ரேடியோவில் ஒலிபரப்பாகும். அந்த அப்பாவித்தனத்துக்குள் கொஞ்சம் மிடுக்கும் காட்டி நடக்கிற நடையில் அமர்க்களப்படுத்தியிருப்பார் கமல்.

படம் முழுக்க ஒரு நாவல் தன்மை இழையோடிக் கொண்டே இருக்கும். அதேபோல், தன் எழுத்துகளால், எந்த இடங்களிலெல்லாம் முத்திரை பதிக்க முடியுமோ அங்கெல்லாம் எழுத்துகளை தூவித்தூவி, நிரவிக்கொண்டே வந்திருப்பார் எழுத்தாளர் பாலகுமாரன்.

‘’இந்தக் கட்டிப்போடுற பிஸ்னஸ்லாம் வேணாம். வேணும்னா ஓடிப்போமாட்டேன்னு சத்தியம் பண்ணித் தரேன். சத்தியம் பெருசா, சங்கிலி பெருசா?’’ என்று கமல் ரோஷிணியிடம் கேட்பார். சத்தியத்தின் மூலம் பேரன்பைப் பெறலாம் என்பதை, பேரன்பின் மூலம் சத்தியமாக இருக்கலாம் என்பதைச் சொல்லும் காட்சி இது!

‘’குயிலே... குயிலே... அங்கே ஒரு குருவியை சுட்டுக்கொன்னுட்டாங்க குயிலு’’ என்று ஏதோவொரு பறவையிடம் சொல்லிப் புலம்புவார். அது எதற்கோ சத்தமிடும். உடனே கமல், ‘’ஆமாம்’’ என்பார்.

‘’என்ன வேணும் எங்கிட்ட? நானா, இந்த உடம்பா? என் உடம்புவேணுமா. எடுத்துக்கோ’’ என்று கமலின் கையை இழுத்து தன் நெஞ்சில் வைத்துக்கொள்வார் ரோஷிணி. ‘’அப்படிலாம் பேசக்கூடாது தப்பு’’ என்பார் கமல். தியேட்டர் நெகிழ்ந்து மலைக்கும். தன் கழுத்தில் கட்டிவைத்திருக்கும் தாலியைக் காட்டுவார் கமல். ‘’சரி கட்டு’’ என்பார் ரோஷிணி. ‘’பெளர்ணமி அன்னிக்கிதான் கட்டணும்... நாளைக்கிதான் பெளர்ணமி’’ என்று சொல்லுவார். ‘’நிலா ஆகாசத்துலயா இருக்கு. மனசுல இருக்கு. மனசுதான் நிலா. நிறைஞ்சிருக்கு மனசு. கட்டு’’ என்று ரோஷிணி சொல்ல, ‘’அபிராமி சொன்னா சரிதான்’’ என்று தாலி கட்டும் காட்சியில், ஏனோ கலங்கி கனத்துப் போய்விடும் மனசு! காட்சியும் வசனமும் நடிப்பும் இசையும் எனச் சேர்ந்து, காதலின் உன்னதத்தை, உயிர்ப்பை வெகு அழகாக உணர்த்திவிடும்.

இப்படி படம் நெடுக பல கவிதைகள்... காட்சிகள். ’மனிதர் உணர்ந்துகொள்ள இது மனிதக் காதல் அல்ல!’ என்கிற அலறல், நம் அடிமனசு வரை சென்று எதிரொலித்து அசைத்துப் போடும். ‘கண்மணி அன்போடு காதலன்’ பாடல், காதலின் மேன்மை சொல்லும். அழகை விவரிக்கும். அன்பைப் பரிமாறும். இசையால் காதல் உணர்த்தும்.

ரேகா மலையேறி வந்து, ‘’ஓ... தாலி கட்டிக்கிற மாதிரி கட்டி, குணாவை நம்ப வைச்சிட்டீங்களா. கீழே இறங்கினதும் தாலியைக் கழட்டிடலாம்’’ என்று அப்பாவியாகவும் ஏக்கமாகவும் ரோஷிணியிடம் சொல்லுவார். ’‘ நாங்க கல்யாணம் பண்ணிக்கிட்டோம். நான் மிஸஸ் குணா’’ என்று ரோஷிணி சொல்ல, ராட்சசத் தனமாக பயங்கரச் சிரிப்பு சிரித்துவிட்டு, ‘மிஸஸ் குணா...’ என்று கமல் கத்துகிற காட்சி, நம்மை உறையவைத்துவிடும்.

கொடைக்கானலை எத்தனையோ படங்களில் பார்த்திருக்கிறோம். இந்தப் படத்தில் கொடைக்கானலே வேறு முகம் காட்டியிருக்கும். சி.ஹெச்.வேணுவின் இயல்பான கேமிராக் கோணங்கள், கொடைக்கானலை இன்னும் அழகாக்கிவிடும். அந்தக் குகை, நமக்குள் கிலியை ஏற்படுத்தும். பின்னர், அந்த குகைக்கு, ‘குணா குகை’ என்றே பெயர் வந்தது தனி சுவாரசியம். சந்தானபாரதி மிகச்சிறப்பாக இயக்கினார். ஜனகராஜ், எஸ்.பி.பி முதலானோரும் சிறந்த நடிப்பைத் தந்தார்கள்.

படம் முழுவதும் இசையால் ராஜாங்கம் செய்திருப்பார் இளையராஜா. ஒவ்வொரு காட்சியையும் இசையின் மூலமாகவும் இன்னும் இன்னும் நயம் சேர்த்து நமக்குள் கடத்திக் கொண்டு சேர்த்திருப்பார்.

’அப்பன் என்றும் அம்மை என்றும்’ டைட்டில் பாடலே கதையைச் சொல்லிவிடும். கமலின் மற்றுமொரு குருவான அனந்து சார் நடித்திருப்பார் இந்தப் பாட்டுக்கு. இளையராஜா குரலில் பாடல் கதையின் கனத்தைச் சொல்லிவிடும்.

’உன்னை நானறிவேன். என்னையன்றி யாரறிவார்’ பாடல், நாயகனின் குணத்தைச் சொல்லிவிடும். ’பார்த்த விழி பார்த்தபடி பூத்து இருக்க..’ பாடல், அழகிய காதலை இன்னும் ஆழமாகச் சொல்லிவிடும். ’கண்மணி அன்போடு’ பாடல், ’மனிதர் உணர்ந்துகொள்ள இது மனிதக்காதல் அல்ல’ என்பதை உணர்த்திவிடும்.

அம்மிக்கல்லை எடுத்து கமல் தன் நெஞ்சில் அடித்துக்கொள்ளும் காட்சி, ஆஸ்பத்திரியில் சுற்றிச்சுற்றி நடந்துகொண்டே பேசிக்கொண்டு, சுவரில் முட்டி சுருண்டு விழும் காட்சி, ’’அபிராமி உள்ளே இருக்கு. எழுத்து... வெளில இருக்கு’’ என்று டாக்டரிடம் கமல் தன்னிலையை விளக்கும் அழகு, ’’அப்புறம் ஏன் லட்டு கொடுத்தே? இப்ப புடிக்கலேன்னா என்ன அர்த்தம்?’’ என்று ரோஷிணி கையில் உள்ள கத்திக்குப் பக்கத்தில் தன் தொண்டையைக் கொண்டுசென்று பேசும் பகீர் காட்சி, ‘அபிராமி... அபிராமி... என்னை எல்லாரும் அடிக்கிறாங்க அபிராமி’ என்று சுயபச்சாதாபத்துடன் கதறுகிற காட்சி என்று கமலின் ஆகச்சிறந்த நடிப்புகளின் வேறொரு பரிமாணம் மட்டுமில்லை ’குணா’. தமிழ் சினிமாவின் சரித்திரப் பக்கங்களில் புதுமொழியுடன் உருவான காதல் படைப்பும் கூட!

இறந்துவிட்ட ரோஷிணியை அணைத்துக்கொண்டு, ‘புண்ணியம் செய் தனமே மனமே ‘ என்று ’அபிராமி அந்தாதி’ பாடியபடி, அப்படியே தூக்கிக்கொண்டு, குணா மலையில் இருந்து குதிக்கும்போது, உறைந்து போனோம்.

திருச்சி மாரீஸ் தியேட்டரில் முதல்நாள், முதல் ஷோ பார்த்தேன். பிறகு அடுத்த நாள், அதையடுத்து, அதையடுத்து என படம் ஓடிய 49-வது நாளின்போது 24 முறை பார்த்திருந்தேன். முதல்நாள் படம் பார்த்துவிட்டு வெளியே வந்தோம். உள்ளே செல்வதற்கு பெருங்கூட்டம் முண்டியடித்து நின்றுகொண்டிருந்தது. ‘குணா எப்படி இருக்கு?’, ‘கமல் கலக்கியிருக்காரா?’ என்று யாரோ யாரைப் பார்த்தோ கேட்டபடி இருந்தார்கள். பலரும் ‘அபிராமி அபிராமி அபிராமி...’ என்று பெருங்கூச்சலுடன் கத்திக்கொண்டே வந்தார்கள்.

இந்த ’அபிராமி’ வார்த்தைதான்... காலங்கள் கடந்தும் ’குணா’ நம்முள் மறக்கமுடியாதவன் என்பதற்கு ஒட்டுமொத்த சாட்சி!

1991ம் ஆண்டு நவம்பர் 5-ம் தேதி வெளியானது ‘குணா’. படம் வெளியாகி 31 வருடங்களாகின்றன. கமலின் ‘குணா’வையும் ‘குணா’வின் ‘அபிராமி’யையும் எப்போதும் மறக்கவே முடியாது நம்மால்!

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in