
’’ நான் 7 வயதில் இருந்தே சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்தின் தீவிர ரசிகனாகிவிட்டேன். 21 வருட கனவு இன்றைக்கு நிறைவேறி உள்ளது’’ என நடிகர் ரஜினிகாந்தை சந்தித்தது குறித்து இந்திய கிரிக்கெட் வீரர் சஞ்சு சாம்சன் நெகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார்.
இந்திய கிரிக்கெட் அணியில் விக்கெட் கீப்பராகவும், ஐ.பி.எல் தொடருக்கான ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் கேப்டனாகவும் களமாடி வருபவர் சஞ்சு சாம்சன். கேரளாவைச் சேர்ந்த இவர், டி20 போட்டிகளில் அதிரடியாக ரன்களை குவிப்பதில் வல்லவராக திகழ்ந்து வருகிறார்.
அவர் தலைமையிலான ராஜஸ்தான் அணி கடந்த ஐபிஎல் தொடரில் இறுதிப் போட்டிக்கு முன்னேறியது. இந்தநிலையில், இந்திய கிரிக்கெட் நட்சத்திரமான சஞ்சு சாம்சன் தமிழ் சினிமாவின் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்தை சந்தித்து வாழ்த்துப் பெற்றார்.
அவர்கள் இருவரும் சந்தித்துக் கொண்டு பேசிய வீடியோவை சஞ்சு தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். இந்த வீடியோ ரசிகர்கள் மத்தியில் அதிகம் பகிரப்பட்டு சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
இந்த சந்திப்பு தொடர்பாக சஞ்சுசாம்சன், “நான் 7 வயதிலிருந்தே சூப்பர் ஸ்டார் ரஜினியின் தீவிர ரசிகன் ஆகிவிட்டேன். அப்போது ஒருநாள் நான் ரஜினி சாரை அவர் வீட்டிற்கு போய் சந்திப்பேன் என பெற்றோரிடம் கூறியிருந்தேன். சுமார் 21 வருடங்களுக்கு பின் அந்த நாள் வந்துவிட்டது. தலைவர் என்னை சந்திக்க எனக்கு அழைப்பு விடுத்தார்” என பதிவிட்டுள்ளார்.