
'தி லெஜண்ட்' திரைப்படத்தைச் சட்டவிரோதமாக இணையதளங்களில் வெளியிடுவதற்குத் தடை விதித்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
லெஜண்ட் சரவணன் முதல் முறையாகத் தயாரித்து அதிரடி நாயகனாக அறிமுகமாகும் 'தி லெஜண்ட்' படம், ஜேடி-ஜெர்ரி இயக்கத்தில், ஹாரிஸ் ஜெயராஜ் இசையில் மிகப் பிரமாண்டமாக உருவாகியுள்ளது. இப்படத்தின் டிரைலர் மற்றும் பாடல்கள் வெளியாகி அதிக வரவேற்பைப் பெற்றுள்ள நிலையில், 'தி லெஜண்ட்' திரைப்படம் நாளை திரையரங்குகளில் வெளியாக உள்ளது.
இந்தப் படத்தை அரசு மற்றும் தனியார் இணையதள சேவை நிறுவனங்கள் மூலமாகச் சட்ட விரோதமாக இணைய தளங்களில் வெளியிடுவதற்குத் தடை விதிக்க வேண்டும் என லெஜண்ட் சரவணன் சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுவானது இன்று விசாரணைக்கு வந்தது.
“மிகுந்த பொருட்செலவில் 'தி லெஜண்ட்' திரைப்படம் தயாரிக்கப்பட்டுள்ளது. இதைத் திருட்டுத்தனமாக இணையத்தில் வெளியிட்டால் பெருத்த நஷ்டம் ஏற்படும். இணையத்தில் இந்தப்படம் வெளியிடுவதற்குத் தடை விதிக்க வேண்டும் ” என வழக்கறிஞர் வாதிட்டார். இதை ஏற்றுக் கொண்ட நீதிமன்றம், ” இந்தப் படத்தை இணையத்தில் வெளியிடாமல் இருக்க 1262 இணையதளங்களுக்கும், 29 இணையதள சேவை வழங்கும் நிறுவனங்களுக்கும் தடை விதித்து உத்தரவிட்டது. மேலும் அனுமதியில்லாமல் திரைப்படங்கள் வெளியாவதை இணையதள சேவை வழங்கும் நிறுவனங்கள் தடுத்து நிறுத்த வேண்டும்" எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.